Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

Monday, November 15, 2010

உகர ஊகாரத் திருத்தம்

உகர ஊகாரத் திருத்தம்
புலவர் செ.இராசு,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தமிழ் எழுத்துச் சீர்மை முயற்சிக்கு இப்போது அறுபது வயதாகிறது. 4.09.1993 ‘குமரன்’ இதழில் முருகப்பா அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மை பற்றி முதலில் எழுதினார். 23,24.12.1933 - ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாட்டில் எழுத்துச்சீர்மை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934 இல் ‘பகுத்தறிவு’ இதழில் சீர்மை பற்றி அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள் 20.01.1935 முதல் ‘குடியரசு’ இதழில் அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். 1948 - இல் சுதேசமித்திரன் நாளிதழை சி.ஆர்.சீனிவாசன் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையுடன் அச்சிட்டார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் பலரும் எழுத்துச் சீர்மை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பற்பல இதழ்களும் சீர்மை பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டன.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 9.10.1978 முதல் தமிழ் எழுத்துச் சீர்மையைத் தமிழக அரசு அறிவித்தது.
ஐ,ஔ - அய்,அவ்: ண,ற,ன - ணா, றா, னா: ண, ல, ள, ன - ணை, லை, ளை, னை: ண,ற,ன - ணொ,றொ,னொ: ண,ற,ன - ணோ,றோ,னோ ஆகியவை அரசு அறிவித்த சீர்மைகள் (பின் 15.01.1979 இல் ஐ, ஔ திருத்தம் தேவையில்லை என்று அரசு அறிவித்தது.). இத்திருத்த ஆணையால் உயிர்மெய் எழுத்துகளில் உகார,ஊகார உயிர்மெய் நீங்கலாக அனைத்தெழுத்துக்களும் சீர்மையை அடைந்தன.
பதினெட்டு மெய்களுடன் உகரம்,ஊகாரம் சேரும் உயிர்மெய்கள் மட்டும் சீர்மையாக இல்லாமல் ஒழுங்கற்று, பல்வேறு முரண்பாடுகளுடன் வடிவங்களைக் கொண்டுள்ளன.
கு,டு,மு,ரு,ழு,ளு:
ங,சு,பு,யு,வு: - குறில் - 3 பிரிவுகள்
ஞ,ணு,து,நு,லு,று,னு:
கூ:
டூ,மூ,ரூ,ழூ,ளு;
ஙூ,சூ,பூ,யூ,வூ; - நெடில் - 4 பிரிவுகள்
ஞ},ணூ,தூ,நூ,லூ,றூ,னூ
இவை 3,4 பிரிவாக இருந்தாலும் நுட்பமாகப் பார்க்குமிடத்து குறிலும் நெடிலும் தனித்தனியே 12 வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றது. குகரம் நெடிலாக மாறும்போது ஏனைய போல் கு என மாறாமல் கூ என உகரம் சேர்த்து எழுதப்படுகிறது. இருப்பினும் நெடிலாக ஒலிக்கிறது. புழந்தமிழாகிய தமிழிலும், வட்டெழுத்திலும் கிரந்தத்திலும் இவ்வளவு முரணான வேறுபாடுகள் இல்லை. இன்றைய தமிழாக உருவெடுத்தபோதுதான் இவ்வேறுபாடுகளைப் பெற்றன.
ஓருயிர் சேர்த்து உயிர்மெய்கள் இவ்வாறு ஒரே சீராக இல்லாமல் வேறுபட்டிருப்பது மொழியியலுக்கு முரண்பாடாக உள்ளன. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் இவ்வேறுபட்ட வடிவங்களைக் கற்று மனத்தில் இருத்திக்கொள்ள எவ்வளவு சிரமப்படும் என்பதை உளவியல் நோக்கில் எண்ணிப்பார்க்க வேண்டும். முரண்பாடுகள் நிறைந்த இவ்வரிவடிவங்களை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தொடக்க வகுப்பு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதைக் கல்வியியல் நோக்கில் காணவேண்டும். சிறார் தலையில் எவ்வளவு பெரிய பாரத்தை ஏறறுகிறோம் என்பதைப் பாருங்கள். இத்தேவையற்ற சிக்கலிலிருந்து சிறார்கள் மீள வேண்டாமா?
தமிழக அரசு கொண்டுவந்த சீர்மைக்கு ………. இகர,ஈகாரத் திருத்தங்களுடன் ஐ,எ,ஏ,உகர,ஊகாரத் திருத்தங்கள் பற்றியும் பல அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். திருத்தம் பெற்று முன்னேறுகின்ற மொழிகளோடு நம் தாய்த்தமிழும் முன்னேற வேண்டாமா? கல்லிலும் செப்பேட்டிலும் ஓலையிலும் எழுதப் பெற்ற முறை தேவைபட்டிருக்கலாம். இன்று மிக வேகமாக முன்னேறிவரும் அறிவியல் முன்னேற்றத்தில் நாமும் இணையவேண்டாமா? தட்டச்சு, மின்தட்டச்சு, அச்சு, தொலையச்சு, குராட்மா அச்சு, கணிப்பொறி,…….. டைப், மோனோ டைப் போன்ற அறிவியல் ஆக்கச் சாதனங்களில் அன்னைத்தமிழ் அரியணை ஏற வேண்டாமா?
காலந்தோறும் தமிழ் எழுத்துக்கள் மாறியே வந்துள்ளன என்பதைக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டுகின்றன. முன்பு எகர, ஒகர உயிர்க்கும் உயிர்மெய்கட்கும், குற்றியலுகரத்திற்கும் புள்ளியிட்டு எழுதினோம். வருடம், மாதம், தேதிகட்குக் குறியீடுகளையே பயன்படுத்தி வந்தோம். தமிழ் எண்களையே முன்பு பயன்படுத்தினோம். இவைகள் எவ்விதப் போராட்டமும் இல்லாமல் மறைந்தனவே ஏன்? 192 காசுகளை ரூபாய்க்குக் கொண்டிருந்த நாம் 100 புதுக்காசுகளை ஏற்றுக் கொள்ளவில்லையா? வள்ளுவர் எழுதிய எழுத்தில் கம்பர் எழுதவில்லை. தமிழ்ச்சுருக்கெழுத்தில் தமிழ் வரிவடிவம் இல்லை என்பதற்காக அதனை யாரும் நீக்க முனையவில்லையே.
இம்மாறுபட்ட இருவகை உயிர்மெய் வடிவங்களுக்கு மட்டும் தட்டச்சுப் பொறியில் 22 தட்டுக்கள் உள்ளன. அவைகளில் சீர்மை மூலம் 20 தட்டுக்கள் குறைந்து இரண்டே தட்டுக்களில் இவ்வடிவங்களைத் தட்டச்சு செய்யலாம். கு, சு, டு, து, நு, மு, ரு, று, ழு, ளு, லு, னு ஆகியவைகட்குத் தனி வடிவங்கள் உள்ளன. (14). ணு அடிக்க இரண்டு பாகங்களைச் சேர்க்க வேண்டும் (2). ங, பு, யு, வு ஆகியவைகளுக்குக் கீழ்க்கோட்டை அடித்து அதன்மேல் ங, ப, ய, வ - வை அடிக்க வேண்டும். (1) டூ, மூ, ரூ, ழூ ஆகியவற்றிற்குச் சுழியை அடித்துப் பின்னர; டு, மு, ரு, ழு ஆகியவைகளை அடிக்க வேண்டும். (1) கூ, சூ ஆகியவைகட்குத் தனி எழுத்துக்கள் உள்ளன (2). பிற எழுத்துக்களை நெடிலாக்க h என்பதை இறுதியில் சேர்க்க வேண்டும் (1). ங, பு, யு, வு - வை நெடிலாக்க கீழ்வளைவைத் தனியாக அடிக்க வேண்டும் (1). சீர்மை மூலம் இவை அனைத்தையும் இரண்டே எழுத்துக்களில் அடக்கலாம். பிற சீர்மைகளுடன் இந்த 20 வடிவங்கள் குறைந்தால் கையடக்கமான தட்டச்சு வந்துவிடும். வேண்டிய இடங்களுக்கு அவைகளை எளிமையாக எடுத்துச் செல்லலாம்.
மின்னணு தட்டச்சு தமிழில் வந்து மின்சுற்றுக் குறைவதால் இக்கருவிகளை இன்றைய நிலையில் பாதி விலைக்கும் குறைவான விலையில் உருவாக்கலாம். இவ்வாறு பொருளியல் நோக்கிலும் உகர, ஊகார சீர்மை முக்கியமானது என்பதை உணர வேண்டும். இவற்றின் மூலம் தட்டச்சு வேகம் பெரிதும் எளிமையாகும். ……… கருவிகள் மூலம்தான் பொத்துப்போவது நீங்கும். எழுத்துக்கள் அழகுபெறும்.
அச்சகங்களில் சில எழுத்துக்கள் 14 கிலோ வாங்கினால் அதே செய்தியை அச்சடிக்க, தமிழ் எழுத்துக்கள் 28 கிலோ தேவைப்படுகிறது. தவிரவும் பழையமுறை எழுத்துக்களில் மேலும் கீழும் வளைவுகள் செல்லுவதால் இடத்தை அடைக்கிறது. இப்போது 30 வரிகள் அச்சிடும் பக்கத்தில் 36 வரிகள் அச்சிடலாம். அச்சு எழுத்துப்பெட்டிகளில் 34 குறைவதால் கை அதிகம் நீளவேண்டிய தேவையில்லை. அச்சுக்கோர்த்தல் எளிமையாகவும், மிக வேகமாகவும் நடைபெறும். விரைவில் நூல்களை அச்சிடலாம். மிகுந்த சிக்கனம் இதனால் ஏற்பட்டு அச்சுச்செலவும் குறையும்.
இணைப்பில் காட்டியுள்ளவாறு பல அறிஞர்கள் உகர, ஊகாரச் சீர்மைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கூறியுள்ளனர். நார்மன் பிரௌன் போன்ற மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையை வரவேற்றுள்ளனர்.
இணைப்பில் முதலாவதாக உள்ள {, _ குறியீடுகள் இன்றைய கிரந்த எழுத்துக்களில் உள்ளன. தட்டச்சுக்களிலும் அவை இடம் பெற்றுள்ளன. ராஜீ, ஜீலை போன்ற சொற்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த அனைவரும் கையாளுகிற குறியீடுகளாக இருக்கின்றன. எழுத்துத் திருத்தங்களின்போது கூடுமானவரை ஏற்கனவே இருக்கின்ற மக்கள் பழகிய குறியீடுகளைச் சேர்த்து எழுதுவதே இன்றியமையாததாகும். முதல் வகுப்பு மாணவருக்கும் இக்குறியீடுகள் புரியும். கொடுமுடி சண்முகம் அவர்கள் 2000 பொதுமக்களிடம் கருத்தறிந்தபோது 80 விழுக்காட்டினர் இக்குறிகளையே ஆதரித்துள்ளனர். இன்றைய தமிழ் ஆட்சிமொழி விரைவு பெறாததற்குக் கூறப்படும் பல்வேறு காரணங்களில் தமிழ் தட்டச்சுப் பொறிகள் போதுமானதாக இல்லாததும் ஒன்று.
புதிய குறியீடுகளைக் கொண்டுவந்து தட்டச்சுக்களை எல்லாம் மாற்றுவது என்பது இயலாத காரியம். இவற்றை ஏற்றால் பழைய தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தலாம். இக்குறியீடுகள் பெற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கக் கூடியவை. எந்த வடஇந்திய மொழிகளிலும் பிற திராவிடமொழிகளிலும் அவை இல்லை.
பல லட்சம் புத்தங்கள் வீணாகும் என்று எவரும் பயப்படத் தேவையில்லை. பழையமுறை - புதியமுறை மாற்றத்தை மட்டும் அச்சிட்டு அந்நூல்களில் ஒட்டிவிடலாம். படிப்போர் எளிமையாகப் புரிந்து கொண்டு படிப்பர். புழைய புத்தகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. அவைகளை மறு அச்சு செய்யும்போது புதிய சீர்மை முறையில் அச்சிடலாம்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை அமைப்பாளராகவும், அமரர் வ.சு.ப.மாணிக்கம் அவர்களைத் தலைவராகவும் கொண்ட தமிழகப் புலவர்குழு தமிழ் எழுத்துச்சீர்மை அவசியம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றி 2.2.1975 - இல் பரிந்துரை செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது. அக்குழு உகர, ஊகாரத் திருத்தம் அவசியம் தேவை எனக் கூறியுள்ளது. தலைவரவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
சிலர் உயிர் எழுத்துக்களில் உகர, ஊகாரத்திற்கும் தீவிர மாற்றத்தையும் விரும்புகின்றனர். எழுத்துக்கள் வேண்டாம் குறியீடுகளே போதும் என்பாரும் அகரம் ஒன்றையே பன்னிரு உயிராகவும் குறியீடுகளைச் சேர்த்து எழுதலாம் என்பாரும் உளர். மிகத் தீவிரமான மாற்றம் புதுமொழிபோல் ஆகிக் கற்றவரையும் கல்லாதவராக மாற்றிவிடும். மேற்கண்ட தேவையான திருத்தங்களே உடனடியாகப் போதுமானது. திருத்தத்தை எதிர்ப்போர் தமிழின் எந்த ஒலியும் குறைவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரிவடிவங்களே செம்மையாக்கப்படுகின்றன என்பதையும் உணர வேண்டும். மொழிப்பற்று என்ற பெயரில் மொழி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.
உலகில் எல்லா மொழிகளும் எழுத்துச் சீர்மையைக் கொண்டு வந்து விட்டன. அண்மையில் உள்ள மலையாளமொழி 500 - க்கும் மேற்பட்ட உருவங்களை 90 ஆகக் குறைத்துவிட்டது. 40000 - க்கும் மேற்பட்ட எழுத்துக்களுடைய சீனமொழி 200 எழுத்துக்களைப்பெற்று ஏறுநடை போடுகிறது. மேலிருந்து கீழ் எழுதப்பெற்ற ஜப்பான் மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது.
வேகமாக முன்னேறிவரும் மொழிகளோடு நம் தொன்மைத்தமிழும் ஈடு கொடுத்து முன்னேற தேவை எழுத்துச் சீர்மை! எஞ்சிய உகர, ஊகாரச் சீர்மை அவசியம் உடனடியாக வேண்டும். ‘வளர்ச்சி என்பது மாற்றம்; மாற்றம் இன்மையேல் வளர்ச்சி இல்லை’ இது சமுதாயத்திற்கு மட்டுமல்ல; மொழிக்கும்தான்!

Monday, August 30, 2010

திணை மயக்கம் - மீள்பார்வை

திணை மயக்கம் - மீள்பார்வை

தொல்காப்பிய பொருளதிகாரம் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் அதன் பிற சிறப்புக்கூறுகளையும் ஆராய்ந்து அறிவதற்கு ஒரு சிறந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களின் நாகரிகத்தைக் காட்டும் பொருள் இலக்கணம் இல்லை. அந்த பொருள் இலக்கணத்தைக் கொண்டிருப்பது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகும். பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் முதலாவதாகப் பகுக்கப்பட்ட அகத்திணையியலில் நூற்பாக்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள திணைமயக்கம் பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

திணையும் - பொருளும்
திணை என்பதனை இளம்பூரணர் பொருள் மற்றும் இடம் என அர்த்தப்படுத்துகிறார். நச்சினார்க்கினியர் திணை என்பதை ஒழுக்கம் என்கிறார். மேலும், தமிழ்ச்சான்றோர்கள் திணையினை அகத்திணை,புறத்திணை என்று இருவகையாகப் பிரித்துக் காட்டுவர். அகப்பொருள் பற்றிய இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் தொல்காப்பியர்.
“ கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(தொல்.அகத்.நூ.947)
என்கிறார். கைக்கிளை, நடுவண் ஐந்திணை, பெருந்திணை என்பனவற்றுள் நடுவண் ஐந்திணையை மட்டும் மூன்று பொருள்களாகப் பிரித்துக்காட்டுவர். தொல்காப்பியர் உலகிலுள்ள பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வகைப்படுத்தி,
“ முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என இலக்கணப்படுத்துகிறார்.

திணைமயக்கம்
திணைமயக்கம் என்பது ஒரு திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள் மூன்றும் தமக்குரிய திணையில் மட்டும் வருவதல்லாமல் பிற திணையிலும் மயங்கி வருவதாகும்.
தொல்காப்பியர் பொருளதிகார அகத்திணையியலில் திணைமயக்கம் பற்றி,
“திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே
நிலன் மயங்குதல் இல்லென மொழிப
புலனன் குணர்ந்த புலமையோரே”
(தொல்.அகத்.நூ.958)
“எந்நிலம் மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாராயினும்
வந்த நிலத்தின் பயத்தவாகும்”
(தொல்.அகத்.நூ.965)
“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே”
(தொல்.அகத்.நூ.959)
என்னும் மூன்று சூத்திரங்களின் வழி குறிப்பிடுகிறார். திணைமயக்கம் பற்றி உரையாசிரியர்களுக்குள்ளும் (பிற சான்றோர்களிடமும்) கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன.

இளம்பூரணர்

திணைமயக்கம் பற்றி இளம்பூரணர், ஒரு திணைக்குரிய முதற்பொருள், மற்றொரு திணைக்குரிய முதற்பொருளுடன் மயங்கிவரும் என்றும் ஆனால் நிலம் வேறொருதிணையில் மயங்காது என்றும் முதற்பொருளில் காலம் மயங்கும் என்றும் குறிப்பிடுவார்.
உரிப்பொருள் தவிர்த்து முதற்பொருளும் கருப்பொருளும் பிற திணைகளோடு மயங்கிவரும் என்பார். விதிவிலக்காகப் பெரும்பான்மை மயங்காமையும் வரும் எனச் சுட்டுவார்.
முதற்பொருளில் காலம் மயங்கும் எனவும் கருப்பொருளில் பூவும் புள்ளுமாகிய பறவையும் பிற திணையில் மயங்கியும் மயங்காமையும் வரும் என்றும் இவ்வாறு கருப்பொருள் மயங்கிவருவது திணைமயக்கம் அன்று என்று ஆனால், உரிப்பொருள் மயங்கி வருதல் இல்லை. உரிப்பொருள் மயங்கிவருதல் கலி முதலாகிய சான்றோர் செய்யுள்களில் கண்டுகொள்க என இளம்பூரணர் குறிப்பிடுவது சற்று முரணாக உள்ளது.
“ ஒண்செங் கழுநீர் கண்போல் ஆயிதழ்
ஊ போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயமண் டாகம் செஞ்சாந்து நீவி”
(அகநானூறு.பாடல்.48)
என்ற பாடலில் மருதநிலத்திற்குக் கருப்பொருளாகிய கழுநீரும், குறிஞ்சிக்குரிய வெட்சிப்பூவை அணிந்த தலைவன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் கருப்பொருள் மயங்கிவந்துள்ளதை அறியலாம்.

நச்சினார்க்கினியர்

ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கிவரும் என்றும் நிலம் இரண்டு மயங்காது காலம் இரண்டும் மயங்கிவரும் என்று குறிப்பிடுவார்.
‘திணை மயக்குறுதல் கடிநிலை இலவே’ என்பதில் திணை என்பது மூன்று பொருளையும் குறித்தே வரும் என்பதால் முதல், கரு, உரிப்பொருள் பிற நிலத்திலும் மயங்கி வரும் என்பார்.
எழுதிணை நிகழ்ச்சியாகிய நால்வகை நிலத்தும் பயின்று வந்த பூவும், பறவையும் தத்தமக்கு உரியனவாகக் கூறிய நிலத்தொடும் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும் அவை வந்தநிலத்திற்குக் கருப்பொருளாம்.வினைசெய் இடத்தின் நிலத்தின் என்பதனால் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்றே கூறுகிறார்.
உரிப்பொருள் அல்லன என்பதை உரிப்பொருள் என்று சொல்லப்பெறும் ஐந்திணையும், உரிப்பொருள் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நான்கு நிலத்தும் மயங்கிவரும் என்றும் இந்நிலத்தின் இவ்வொழுக்கம் என வரையறுப்பது நாடகவழக்கின் பாற்படும் என்பார். மேலும், உரிப்பொருளாக மாறிவந்த பாலையும் நால்வகை நிலத்தின் கண்ணும் மயங்கிவரும் என்றும் கூறுவார். இன்றும் பிற சான்றோர் செய்யுள்களுள் உரிப்பொருள் மயங்கியும் காலம் மயங்கியும் வரும் என்பார். நச்சினார்க்கினியர் உரை வகுக்கிறபோது சூத்திரத்திற்குப் பொருத்தமான சங்கப்பாடல்களையே உதாரணப்படுத்துகிறார்.
“ மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு”
(கலித்தொகை.செய்.136)
என்ற நெய்தல் நிலப்பாடலில் பெருந்திணைக்குரிய மடலேறுதல் என்ற ஒழுக்கமுறைமை பயின்று வந்துள்ளதை அறியலாம்.

நம்பியகப்பொருள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மூலநூலாகக் கொண்டு பிற்காலத்து எழுந்த இலக்கண நூல்கள் சிலவற்றுள் நம்பியகப்பொருள் ஒன்று. நம்பியகப்பொருள் இயற்கைப்புணர்ச்சியில் தொடங்கி திணைமயக்கத்தில் முடிவடைகிறது. இவ்விலக்கண நூல்,
“முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய”
(நம்பியகப்பொருள்.பொது.நூ.251)
என முதல்,கரு,உரிப்பொருள் மூன்றும் தன்நிலத்தில் திணையோடு கூடிய இலக்கண முறைப்படி வாராமல் பிறதிணையோடு மயங்கியும் வரும் என்று திணைமயக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.
“அஃது என்னையெனின் பெரும்பொருளகத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே என்பதனாலும் உரிப்பொருள் சூத்திரத்துள் தேருங்காலை என்று குறிப்பிடுவதால் உரிப்பொருளும் மயங்கும்” என நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது.
இந்நூலில் திணைமயக்கம் பற்றிய நூற்பாவிற்குச் சான்றாக உரிப்பொருள் மயங்கி வந்த பாடல்கள் நிறைய தரப்படுகின்றன.

திணைமயக்கம் பற்றிய பிற கருத்துகள்

உரிப்பொருள் என்பது ஐந்து திணைகளுக்கும் உரிமையான பொருள் ஆகும். முதற்பொருளைக் காட்டிலும் கருப்பொருள் சிறந்தது. கருப்பொருளைக் காட்டிலும் உரிப்பொருள் சிறந்ததென்பதை,
“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை”
(தொல்.அகத்.நூ.949)
என்ற அகத்திணையியல் நூற்பா தௌ்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.
“அன்றில் ஒரு தரம் கத்தும்பொழுது பொறாள் என் ஒரு வல்லியே” என்ற வரிகளின் மூலமாகப் பறவைகளுக்கும் உரிப்பொருள் உண்டு என உணரமுடிகிறது. பெண் அன்றில் ஒருமுறை கத்தியும் ஆண் அன்றில் வரவில்லை என்றால் இறந்துபடும் எனப் பாலைத்திணையின் பிரிதல் ஒழுக்கத்தினைச் சுட்டுவதால் உரிப்பொருளின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. ஆகவே, உரிப்பொருளைக் கொண்டே அத்திணையினை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும் என்ற கருத்து நிலவுகிறது.
“முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே”
(தொல்.கள.நூ.1052)
என்ற களவியல் நூற்பாவிற்கு உரைவகுத்த உரையாசிரியர்கள் பெருத்த வேறுபாடுகளுடன் உரை எழுதியுள்ளனர். இந்நூற்பாவிற்கான நேருரை, நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளோடு பொருந்திய களவு மணம், கெடுதல் இல்லாத சிறப்புடைய ஐந்து நிலங்களிலும் பயின்று வரும் என்பதாகும். எனவே,யாழோர் மேன,குறிஞ்சி,களவுமணம் என்பது ஒரு பொருளைத் தந்து நிற்கும்.
குறிஞ்சிக்குரிய புணர்தல் மற்ற நான்கு நிலங்களிலும் நிகழும். இளம்பூரணர் அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் ‘காமக்கூட்டம்’ என்றதனால் எல்லா நிலத்தும் காமக்கூட்டம் நிகழப்பெறும் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
திணைமயக்கத்தில் முதற்பொருளாகிய நிலம் மட்டும் மயங்காது மற்ற பொழுது, கரு, உரி ஆகிய மூன்றும் எந்த நிலத்துக்கும் மயங்கும் ‘நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப’ என்ற நூற்பாவில் ‘மொழிப’ எனப் பிறர் மேல் வைத்துச் சொன்னதன் காரணமாக நிலங்கள் மயங்குவது உண்டு என்பது தொல்காப்பிய கருத்துமாகும்.
“நாடா கொன்றோ காடா கொன்றோ
ஆவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர; ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
(புறநானூறு.பாடல்.187 )
என்ற புறநானூற்றுப் பாடல் நாடும், காடும், குழியும், மேடும் ஆக நடந்து நடந்து சென்று அந்நிலம் மயங்கி மாற்றமடைந்த தன்மையை ஔவையார் தனது பயண அனுபவத்தின் வழி கவிதையாக வெளிப்படுத்துகிறார். ஆகவே, உரிப்பொருள் முழுவதுமாக மயங்கும், கருப்பொருள் பெரும்பான்மையும் நிலம் சிறுபான்மையும் மயங்கும் என அறிந்து கொள்ள முடிகிறது.
“இலக்கியத்தில் தலையாய கவிதை தோன்றும் பொழுது சிலநேரங்களில் இலக்கணக் கட்டுபாடுகளை மீறியும் கவிதைகள் வெளிவரலாயிற்று. இதனை, நன்கு தெரிந்த தமிழர், தன் மரபை மாற்றிக்கொள்ளத் துணிந்து, அங்ஙனமே மாற்றிக்கொண்டான். மரபு என்பதே சான்றோர் செய்த ஒன்றுதானோ அவர்களாகப் பார்த்து அதைமாற்றினால் அதனால் நேரும் இழுக்கு ஒன்றும் இல்லையன்றோ”
“கவிதை ஆக்கும் கலைஞனை விடச் சிறந்தோர் யார் இருக்க இயலும் கவிதையை ஆக்கவும் அழிக்கவும்? எனவே, நாளாவட்டத்தில் ஒரு திணைப்பொருளை மற்றொரு திணையில் கூறும் இயல்பு தோன்றியவுடன் ‘திணை மயக்கம்’ என்ற ஒன்றை மனிதன் வகுத்தான் எனவும் இம்முறையில் இலக்கணமும் ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்று வரையறை செய்தது” என அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். ஐந்திணை ஒழுக்கம் சிறப்புரிமை பெற்ற நிலத்தில் நிகழ்வதே சிறப்பு. இதனையே, இளம்பூரணரும் எல்லா நிலத்தும் எல்லா ஒழுக்கமும் நிகழுமாயினும் இந்நிலத்து இவ்வொழுக்கமே நிகழும் எனக்கூறுவது சிறப்பு என்கிறார்.
மூன்று பொருள்களும் பிறநிலத்து மயங்கி வருதலும் உண்டு இதனால் குற்றமில்லை. புலனெறி வழக்கின்படி ஒழுக்கம் சிறப்பு நிலையில் இருந்து பொதுநிலைக்கு வருதல் சிறப்பு கருதியே ஆகும். எனவே, நிலம் நிலையானது. பொழுது பொதுவானது. ஒழுக்கம் இயங்கும் தன்மையுடையது. கருப்பொருளும் நிலம் பொழுதுக்கேற்ப இயைந்து வருவதும் சிறப்பாகும் என்று காப்பியர் நெறி என்னும் நூல் விளக்கும்.


நிறைவுரை

திணைபற்றியும் திணைமயக்கம் பற்றியும் உரையாசிரியர்கள் பலர் கருத்து வேறுபாடுடன் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியர் சூத்திரம் மட்டுமே எழுதி வைத்தாரொழிய உரை எழுதவில்லை. தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் உரைகள் தேவையில்லாமல் இருந்திருக்கலாம். ஒரு தலைமுறை மாற்றம் ஏற்படுகிறபோது இலக்கிய வடிவங்களும் கருத்தியலும் சிந்தனையும் மாறுவதுபோல் உரை எழுதும் வழக்கமும் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். பிற்காலத்துத் தோன்றிய உரையாசிரியர்கள் தங்கள் காலத்து வழக்குகளை மையமாகக் கொண்டு உரை வகுத்திருக்கின்றனர்.
ஒரு நிலத்தில் உள்ள சிறப்புப்பொருளாகிய உரிப்பொருள் மயங்குவது மரபாகாது என்று இளம்பூரணரும் சிறுபான்மை மயங்குவதால் குற்றமில்லை என நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர் மட்டுமல்லாது பிற உரையாசிரியர்கள் திணைமயக்கம் பற்றி வெளிப்படுத்தியக் கருத்துக்களை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
தொல்காப்பியர் ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ எனக் குறிப்பிடுகிறார். இக்கருத்தியல் அவர் காலத்தில் நிலவிய இலக்கியங்களுக்கா? அல்லது பிற்காலத்துத் தோன்றிய இலக்கியங்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் பெரும்பான்மையான சங்கப்பாடல்களில் முதல், கரு, உரிப்பொருள்கள் பிறநிலத்து மயங்கிவந்து இலக்கணப் பிறழ்ச்சியுடன் காணப்படுகின்றன. தொல்காப்பிய இலக்கண, இலக்கியக் கொள்கைகளைச் சங்கப்பாடல்களுடன் ஒப்பிடும்போது சில பாடல்கள் பொருந்தியும், பொருந்தாமையும் அமைந்திருக்கின்றன. இவ்வாறு, இலக்கண, இலக்கியக் கொள்கைகளுக்குக் கட்டுக்கடங்காத பாடல்கள் ஆய்வுக்குரியதாக இருக்கின்றன.
தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய பிற்காலத்து இலக்கண நூல்கள் திணைமயக்கம் என்ற இலக்கணப் பிறழ்வினைப் பெருவாரியான நூற்பாக்களில் பதிவு செய்யவில்லை. ஆகவே, திணைமயக்கம் என்ற கருத்தியல் விவாதத்திற்கும் ஆய்வுக்குரியதுமாகும்.