Sunday, November 6, 2011

கல்வித்தளம் - அபாயகரமான புரிதல்கள்


சமூகத்தின் மீதான கவனஈர்ப்பும் அக்கறையும் இல்லாமல் மனிதத்தன்மையற்று வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களைக் குறித்து இன்றைய சமூக ஆர்வலர்களும் படைப்பாளர்களும் சில உன்னதமான பேராசிரியர்களும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வணிக வளாகமாக மாறிக்கொண்டிருக்கும் கல்விநிலையங்கள் அனைத்தும் மாணவர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு எப்படி அடிமையாக வேலை செய்ய வைக்க முடியும் என்ற முனைப்புடன் அல்லும் பகலும் சிந்தித்து அவர்களைக் கவனமாக உற்பத்தி செய்து வருகின்றன. பாடத்திட்டமும் மனனப் பயிற்சியுமே அறிவு எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் அரசு வேலைசெய்யும் பெற்றோர்களும் தமது பிள்ளைகளைப் பணம் காய்க்கும் மரங்களாக வளர்க்கவே ஆசைப்படுகிறார்கள்.


இது குறித்து கல்வித்தளத்தில் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. மேலும், அரசுத் தேர்வுகளை நோக்கிப் பயணிக்கும் மாணவர்கள் வெறுமனே தகவல் சேகரிப்பவர்களாக உருமாறுகிறார்கள். இவர்களது வாசிப்பும் வேலை என்பதன் பொருளாதாரத் தேவையை ஒட்டியதாகவே இருக்கிறது. அவ்வாறு தேர்வில் வெற்றியடைந்து பணியில் அமர்ந்தவுடன் தனது வாழ்க்கையைச் சுயம் சார்ந்து தனக்குள்ளேயே ஒடுக்கிக் கொள்கிறார்கள்.

படித்தவர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் எனக் கூக்குரலிடுகிற சமூகம் எதைப் படித்தவர்கள்? என்ன படித்தவர்கள்? எங்கே படித்தவர்கள்? என்ற கேள்வியைத் தமக்குள்ளே விவாதிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, அடிப்படைக்கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படவேண்டும் என்ற புரிதல் இல்லாத தமிழ்ச்சமூகத்தில் தாய்மொழிக்கல்வியைக் கட்டாயப்படுத்த வேண்டிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கச் சூழலில் பன்மொழியறிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் தாய்மொழியைத் தவிர்த்து எழக்கூடியப் பிறமொழியறிவு சுயசிந்தனையை மழுங்கடிக்கும். ஓருவர் வேலைவாய்ப்புக் கருதி எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், சிந்திப்பது தாய்மொழியில் மட்டுமே முடியும் என்பதை மெனக்கெட்டு மெத்தப் படித்தவர்களே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இன்று தமிழகக் கல்விநிலையங்களில் பயிலும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் அரைகுறையாகவே கற்றுத் தேர்கின்றனர்.

பள்ளியிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் தமிழ் வாசிப்பும், அவர்கள் தமிழை எழுதும் முறையையும் கவனித்தால் எந்தத் தமிழ் ஆசிரியரும் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கித்தவிக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்த அசலான சில பார்வைகள் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடிக்கணக்கில் பொறியியல் வல்லுநர்களையும் மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் உற்பத்தி செய்யும் கல்விநிலையங்களில் மாணவச் சமூகம் கேட்பாரற்றுச் சீர்குலைந்து நிற்கிறது.

கல்லூரியில் நான் கேட்ட சில மாணவ, மாணவியரின் உரையாடல்கள்,

டேய் மச்சி இன்னைக்குப் பஸ்ல ஒரு செம பிகர்ட...வரும்போது நோட் கொடுக்குற சாக்ல பேசி கரெக்ட் பண்ணிடேன்ட.. டேய் மச்சி அவ எறங்கிப் போகும் போது போன் நம்பர் கொடுத்தாட எப்புடுற ... நாங்கதான் பேசி நம்பர் வாங்கிடோம்ல..இனிமே என்ன விடிய விடிய ஒரே கடலதான். மச்சி அப்படி என்னதான்டா பேசுவீங்க.. நாங்க என்ன அமெரிக்கப் பயங்கரவாதத்தையும் ஈழப்போரப்பத்தியுமா பேசப்போறம்... நீ வேற என்னட மச்சி புதுசு புதுசா எதோ பேசுற.. விடு மச்சி இதெல்லாம் சிலபஸ்லயே இல்ல. அதுக்கெல்லாம் எவனாவது இருப்பானுங்க.. ஏதோ மூவர் தூக்குத் தண்டனைய ரத்து பண்ணச் சொல்லி ரோட்டுல கிடந்து மைக்கப் புடுச்சிக்கிட்டுத் தொண்டகிழியக் கத்திக்கிட்டுக் கிடப்பானுங்க.. தண்ணிகூடக் குடிக்கமாட்டாய்ங்க.. அதவுடு மச்சி நம்ம மேட்டருக்கு வா...

டேய் மாப்ள தல என்னமா..பைட் பண்றாரு..பஸ்ட்ஷோவுக்கே போயிட்டேன்ல.. தலனா சும்மாவ. நலல வேலட மச்சி அந்தச் சிடுமூஞ்சி வாத்தியான் கிளாஸ்க்குப் போகல...பங்காளி அந்த வாத்தியான் சிரிக்கவே மாட்றான்டா...எங்கேதான் இத அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியல மச்சி...

டேய் மாப்ள... இந்த வாத்திங்க தொல்ல தாங்க முடியல..அவுங்களால பாடம் நடத்த முடியலனா இந்த அசைன்மென்ட்ட கொடுத்து உயிர வாங்குறானுங்க...இதுல பவர் பாயின்ட் பிரசன்டேசன் வேற.. நீ ஏன் கவலைப்படுற நமக்காகவே காலேஜ் முன்னாடி பிரவுசிங் சென்டர் வைச்சிருங்காங்க.. நேரபோய் நெட்டுல தட்டு அவ்வளவுதான் சிம்பிள்..இதுக்குப்போய் பீல்பண்றியே மச்சி..அப்ப..நூலகம்...அதெல்லாம் ப்ரீ பீரிடு வரும்போது பாத்துக்கலாம்...

ஏண்டி நேத்து விஜய் டி.வில கல்லூரியின் கத பாத்தியா... அது நாம ஸ்கூல் படிக்கும்போது போட்ட கனாக்காணும் காலங்களோட தொடர்ச்சியாம்...சூப்பரா இருக்குடி..நீயும் பாரேன்... இப்பொல்லாம் நான் மானாட மயிலாட பாக்கமுடியாம மிஸ் பண்றேன் தெரியுமா... காலேஜ்ல வேற நிறைய எழுதச்சொல்றாங்க...கொடுமைக்காரனுங்க..

என்ற உரையாடல்களை இன்றைக்கு இருக்குற எல்லா கல்லூரிகளிலும் எதார்த்தமாகக் கேட்கமுடிகிறது. இன்றைய இளைஞர்களின் ஊடகம் குறித்தப் பார்வை வேறுவகையானதாக இருக்கிறது. தினசரி நாளிதழ்களைக்கூட நுனிப்புல் மேய்ந்துவிட்டுத் தங்களுக்குத் தேவையான விளையாட்டுச் செய்திகளையும் சினிமாச் செய்திகளையும் போகிறபோக்கில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களது அவசர உலகம் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் புரிந்து கொள்ளப்படாததாகவே இருக்கிறது.

சமகாலத்தில் ஊடகம் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும் என்பது அசாத்தியமான செயல். இன்றைய சூழலில் இளைஞர்களிடையே ஊடகத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சினிமா, இணையதளம், அலைபேசி, தொலைக்காட்சி என்ற தகவல் தொடர்பு சாதனங்களுக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டு இவற்றைப் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்திவரும் இளைஞர்கள் பெருகிவருகின்றனர். இவை கணிசமான அளவில் மாணவர்களின் மனதில் உளவியல் சிக்கலை ஏற்படுத்துகிறது. இவ்வூடகங்களின் அதிமுக்கியமான நுகர்பொருள் மாணவர்கள் மட்டுமே. ஊடகங்களின் மீதான போதையில் வீழ்ந்து கிடக்கிற மாணவ சமுதாயத்தை மீட்டெடுப்பதற்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.


கல்வித் தளத்தில் இதற்கான சில மாற்றுவழிகள்

  • ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தகவல்களைப் பெறுவதற்கான கருவிகள் என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
  • நூலகத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கற்றுத்தர வேண்டும்.
  • கற்பனைத்திறன் வளர்வதற்கும் படைப்பாக்க மனநிலை ஏற்படுவதற்கும் புத்தக வாசிப்பும் தன் சமூகம் சார்ந்த விமர்சனப் பார்வையும் அநீதிகளை எதிர்த்துக் கேள்வி எழுப்ப வேண்டிய மன எழுச்சியும் தேவை என்பதை உணர்த்த வேண்டும்.
  • உலகசினிமா, ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு சமூகத்தின் மீதான புரிதலை உணர்த்தி மாற்றுத்திரைக்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவர்களின் வாசித்தல் திறனைப் பெருக்க நூல் விமர்சனக் கூட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட வேண்டும்.


பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் தமிழ்க் கவிதைகள் - 01


மனிதனை மையப்படுத்தி ஆராயும் சூழலியல்மானிடச் சூழலியல்” (human ecology) அல்லதுபண்பாட்டுச் சூழலியல்” (cultural ecology) எனப்படுகிறது. அது மனிதனை உள்ளடக்கிய சூழலியல் ஒழுங்கமைப்புகளைப் பற்றி ஆராய்கிறது. இயற்கையின் விளைவுகளையும் தாக்கங்களையும் மனிதன் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும் அதுபோல், அவன் எவ்வாறு சமூக நிறுவனத்தாலும் பண்பாட்டு விழுமியங்களாலும் செல்வாக்கிற்கு ஆட்படுகிறான் என்பதையும் முதன்மை நிலைப்படுத்தி பண்பாட்டுச் சூழலியல் ஆராய்கிறது என்கிறார் கான்ராட் பிலிப் கட்டாக் என்ற மேலைநாட்டு கோட்பாட்டாளர். இதனை மையமாகக் கொண்டு தமிழ்க் கவிதைகளை ஆராயும் நோக்கில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

மேலைநாட்டுக் கோட்பாடுகளை வைத்து தமிழ் இலக்கியங்களை ஆராய்வதைவிட, தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டின் அடிப்படையை மையமாகக் கொண்டே பிற்கால இலக்கிய வடிவங்களை ஆராயலாம் என்கிறார் பணிக்கர். சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது. பிறகு, இதே இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை உடைந்து நிலமானியமுறைக்குத் தமிழ்ச் சமூகம் மாறிய நிலைமையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் குறிஞ்சி, முல்லை ஆகிய இரண்டும் வறண்டு மாறிய நிலப்பகுதியான பாலை எனத் தமிழகம் ஐவகையான நிலப்பிரிவுகளை உள்ளடக்கியது என்கிறது சங்க இலக்கியங்கள். இத்திணைப்பெயர்களும் அந்தந்த நிலத்தின் பூப்பெயர்களைக் கொண்டு வைக்கப்பட்டுள்ளமை இயற்கையின் மீதான தீராக் காதலை வெளிப்படுத்துகிறது. இவ்வகையான இயற்கை நெறிக்காலம் நிலமானிய முறையை அடைந்து நாகரிகம் என்கிற பெயரில் தன்னை அழித்துக் கொள்ளத் தொடங்கியது. சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் வளமையைக் கவிதையாகப் பாடினார். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் இயற்கையின் வறுமையைத் தமது கவிதைகளில் பதிவு செய்து வருகின்றனர்.

நான்தான் இந்தப் பூமியின் கடைசிக் கவிஞனாக இருக்கலாம்”(I am Perheps the last poet) என்று எழுதினார் மாயகாவ்ஸ்கி என்ற கவிஞர். இப்படியொரு துக்ககரமான வார்த்தையை எந்தக் கவிஞனும் எந்த மொழியிலும் எழுதிவிடவில்லை. ஒவ்வொரு மொழியிலும் காலத்தின் மாற்றத்திற்கேற்ப கவிஞர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களது கவிதைகளே பிற்காலச் சந்ததியினருக்கு விதைகளாக இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்க்கவிதை நீண்ட நெடிய பாரம்பரிய வாழ்க்கையைக் கொண்டது. திடகாத்திரமான புலமையும் உரத்தசிந்தனையும் கொண்ட கவிஞர்களால் வளம்பெற்றது.

சகலவிதமான கற்பனா தரிசனத்துடன் உலவிக் கொண்டிருக்கிற கவிஞனுக்கு இயற்கையின் மீது அளவற்ற காதலுண்டு. தனது சுற்றுப்புறம் மாசுபடுகிறபோது கொந்தளித்து, மனக்குமுறல்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தி மௌனப்புரட்சியை உண்டாக்குபவன் கவிஞன்.

ஐம்பூதங்களில் ஒன்றாகியக் காற்றைக் கடவுளாக நேசித்த பாரதி,

மலைக்காற்று நல்லது

கடற்காற்று மருந்து

வான்காற்று நன்று

ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி

விடுகின்றனர்

அவர்கள் காற்று தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை

என்று வருத்தமடைகிறார். சுவாசம் நின்றுவிட்டால் உயிரில்லை. காற்று மாசுபட்டால் உலகமில்லை என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். காற்றை நேசியுங்கள் அவன் தெய்வம் என்கிறார் பாரதி.


ஆய்வு தொடரும்......................................

Wednesday, July 27, 2011

தமிழ் மொழி அரசியல் - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்
கி.பார்த்திபராஜா – வின்
“தமிழ் மொழி அரசியல்”
- பி.பாலசுப்பிரமணியன்
அரசியல், வரலாறு, மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், நாடகம் எனப் பல துறைப்பட்ட கருத்தியல் வடிவங்களை மார்க்சியப் பார்வையுடன் வளமான சிந்தனைகளோடு ஆராய்ந்து வருபவர் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா. இவர் தமிழ் நாடக ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும் மொழி அரசியல் குறித்த அவரது புலமை தமிழ் மொழி அரசியல் நூலாகப் பிரசவித்திருக்கிறது.
மொழி குறித்த அரசியல், சமய, வரலாற்றுப்பார்வை காலங்காலமாகக் கவனப்படுத்தப்படாமல் அம்மொழி இலக்கியங்களை இரசனைப்பூர்வமாகப் பார்க்கிற ஆதிக்க மனோபாவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் குறிப்பாகத் தமிழிலக்கியம் படித்துவிட்டு இனவுணர்வில்லாமல் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அறிஞர்களைத் தட்டி எழுப்புகிறது இந்நூல். மேலும் இந்நூல் குறித்த தி.சு.நடராசனின் முன்னுரை பேசப்பட வேண்டியவை.
தமிழ் x சமஸ்கிருதம், தமிழ் x இந்தி, தமிழ் x ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஊடாட்டத்தால் தமிழ்ச்சமூகம் அடைந்த மாற்றம் அளப்பரியது. அரசியல் கட்சிகளும் சமய இயக்கங்களும் தத்தம் நிலையான இருப்பிடத்திற்காக மொழியை அரசியலாக்கிய நிகழ்வு வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியர் அவற்றைத் தோண்டி எடுக்கிறார். எந்தச் சலனமுமின்றி கொடிய செயல் அறவே என அக்கருத்தியல் நிகழ்வுகளை விமர்சிக்கிறார்.
திராவிட இயக்க ஆளுமைகள் என்று தமிழ்ச்சமூகத்தால் அடையாளப்படுத்தப்படுகிற தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் மொழிக்கொள்கை, தமிழ்மொழி குறித்த அவர்களது பார்வை, சமஸ்கிருதம் மற்றும் இந்தியை எதிர்க்கிறோம் என்ற பேரில் அவ்விடத்தில் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்திய இவர்களது விசாலமான அறிவும் விமர்சிக்கப்படுகிறது. பார்ப்பனிய மனோபாவம் மிகுந்த ராஜாஜியின் சுயசாதியம் சார்ந்த இந்தி ஆதிக்கக் கருத்தியல் உடைபடுகிற தன்மையை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். காலனிய ஆட்சியருடன் விடுதலைக்குப் பின்பு காங்கிரஸ் இயக்கத்தினரிடம் இருந்த மொழிச்சிந்தனை ஆரோக்கியமானதல்ல என்பதையும் பார்த்திபராஜா பதிவு செய்கிறார். இவ்வாறு, இந்நூலில் இடம்பெற்றுள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் மொழிக்கொள்கைகள் குறித்த இரண்டு விமர்சனக் கட்டுரைகள் கவனத்திற்குரியவை.
தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆங்கிலம் பகுத்தறிவு மொழி என்ற பெரியாரின் பண்பு அடிப்படையிலான மொழி வகிபாடு சரியான கருத்தல்ல என்பதும் ஸ்டாலினின் மொழி வரையறை, ஆணியமொழி மற்றும் சாதிய மொழியின் அடையாளம், தமிழ் உணர்ச்சியின் எரிச்சலாகப் புதுமைப்பித்தன், ஞானக்கூத்தன், ஜெயகாந்தன் போன்றோரின் தமிழ்மொழி குறித்த பார்வையினையும் மொழி என்பது பரிமாற்றக் கருவி அல்ல சமூகப்பண்பாட்டின் அடையாளம் என்பதையும் ஊடகங்கள் எவ்வாறு தமிழைக் கொலை செய்கின்றன என்பதும் தமிழ்நாட்டில் தமிழ்ப் பேசுவதற்குத் தங்கக்காசு கொடுக்கும் செயல்பாடு, திரைப்படங்களில் தமிழாசிரியர்கள் கேலிக்குள்ளாக்கப்படும் முறைமை, ஆங்கிலப்பள்ளிகளில் தமிழ்ப் பேசினால் தண்டம் இறுக்கும் தமிழ்த்தேச அவமானம் குறித்த விமர்சனங்களை “மொழி வரலாற்று வகிபாகம் – சமூகம்” என்ற கட்டுரையில் விவாதிக்கிறார்.
சமஸ்கிருதத்தில் புலமை கொண்ட தமிழறிஞர்கள் தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என வாதிடத் தொடங்கினர். தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தூக்கி நிறுத்தியவராக ஒரு சாரரால் புகழப்படுகிற ம.பொ.சிவஞானம் மொழித்தோற்றத்தை இறைப்பின்னணியுடன் சேர்த்துப் புரிந்து கொண்டவர் என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது. இலக்கண இரட்டையர்களான பிரயோக விவேகம் எழுதிய சுப்பிரமணிய தீட்சிதரும் இலக்கணக்கொத்து ஆசிரியருமான சுவாமிநாதத் தேசிகரும் தமிழின் தனித்தன்மையை அழிப்பதற்கான இயக்கத்தைத் தொடங்கினர் என்ற வ.சுப.மாணிக்கனாரின் கருத்து விவாதத்திற்குரியது. ற,ன,ழ,எ,ஒ என்ற எழுத்துக்கள் மட்டுமே தமிழுக்குரியன என்றும் தமிழ் ஐந்தெழுத்துக்கொண்ட ஒரு பாஷை என்று குறிப்பிடும் சுவாமிநாதரின் கருத்து நூலில் விமர்சிக்கப்படுகிறது. தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்பதை நிறுவுவதற்குப் பல மொழி அரசியல் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மா.பொ.சியும் பாரதியும் சமஸ்கிருதத்தை உயர்வாகப் பேசியிருக்கின்றனர். பிற்காலத்தில் பாரதிக்குப் பிடித்த மொழியாகத் தமிழ் இருந்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.
தமிழிலக்கியச் சூழலில் எழுந்த பக்தி இயக்கங்கள் தமிழையும் வடமொழியையும் ஒன்றாகக் கண்டன. இவ்வியக்கங்கள் இறைவன் இவ்விரு மொழிகளுக்கும் உரியவன் என்பதை அடையாளப்படுத்தின. தமிழ் x வடமொழி எதிர்வுணர்வு என்பது வேளாள நிலவுடைமையாளர்கள் மற்றும் பார்ப்பன நிலவுடைமையாளர்கள் இடையிலான முரண்பாடுகள் என்கிறார் கி.பார்த்திபராஜா.
பக்தி இயக்க உருவாக்கத்திற்கு முன்பு தமிழ் இலக்கிய, இலக்கண ஆக்கங்களைச் செய்தவை சமண, பௌத்தச் சமயங்களே ஆகும். இச்சமயங்களை மக்களிடமிருந்து ஒழித்துக்கட்ட பக்தி இயக்கம் முச்சங்கப் புனைவு குறித்த கருத்தியலை வடிவமைத்தது. பிற்கால வரலாற்றில் சமயமும் தமிழை அரசியலாக்கியது. மொழித்தோற்றம் குறித்த கருத்து சமயத்தோடு பிணைக்கப்பட்ட வரலாற்றினை இந்நூலின் முதற்பகுதி ஆராய்கிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள “ஸ்போக்கன் சம்ஸ்கிரிட் செத்தவன் ஓட்டுப்போட வரும் வித்தை” என்ற கட்டுரை சமஸ்கிருதம் பேச்சு மற்றும் எழுத்து வழக்கற்ற மொழி என்பதையும் இம்மொழியைச் செம்மொழியாக்கி அழகுபார்த்த இந்திய அரசின் மேட்டிமைத்தனத்தையும் போலி அரசியலையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கிறது. சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் செம்மொழியாவதற்கான தகுதியினைப் பட்டியலிட்டு அதற்கான அங்கீகாரத்தை அடையாளப்படுத்துகிறது. அதனையடுத்து, மூன்று மொழிப்போராட்டங்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. 1938 -40 களில் நடைபெற்ற முதல் மொழிப்போர் இந்தியாவின் பொதுமொழி, ஆட்சிமொழி, நிர்வாகமொழி, தொடர்புமொழி ஆகிய அனைத்திற்கும் இந்தியைக் கட்டமைக்க முயற்சித்த காங்கிரஸின் தலைமையை எதிர்த்து நடைபெற்றது. தமிழகத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முந்திக்கொண்டு நின்றவர் இராஜாஜி. அதன்காரணமாக முற்போக்கு ஆளுமைகள் இவரை எதிர்க்கலாயினர். இம்மொழிப் போராட்டத்தில் படிக்காத பாமர மக்களும் உழைக்கும் ஏழைகளும் கலந்து கொண்டு போராடினர். இந்தி எதிர்ப்பு போரில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட முதல் மொழிப்போர் ஈகி தலித் சமூகத்தைச் சார்ந்த நடராசன் என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறார் இந்நூலாசிரியர். முதல் மொழிப்போர் பற்றிய விமர்சனக் கட்டுரையின் மற்றொரு அம்சம் இந்தியை எதிர்த்து நடைபெற்ற ஒட்டுமொத்த மாநாடுகளைப் பற்றிய விவரங்கள் தொகுத்துத் தரப்பட்டு அவை விமர்சிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் மொழிப்போர் மாணவர்களால் முன்னிறுத்தி எடுத்துச் செல்லப்பட்டது. கீழ்ப்பழுவூர் சின்னச்சாமியின் தீக்குளிப்பு கவனிக்கத் தக்கது. மரணத்திற்கு முன்பு சின்னச்சாமி எழுதிவிட்டுச் சென்ற கடிதத்தை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் பார்த்திபராஜா.
தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தித் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தால் நடத்தப்பெற்ற மூன்றாம் மொழிப்போர் பற்றியும் இந்நூல் பேசுகிறது. மொழிப் போராட்டங்களைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றின் அரசியல் பின்னணியைப் புரிந்து கொள்வதற்கும் இந்நூல் ஏதுவாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட இனத்தைத் தொப்புள்கொடி உறவில்லாமல் வேரோடு அழிக்க வேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை அழித்தால் போதுமானது. ஆகவே, தமிழ்மொழியை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களைப் பற்றி என்றைக்குத் தமிழர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள். தமிழ்ச்சமூகத்தில் ஆங்கிலம் படித்தால் போதும் இதுவே மேதைமைக்கான அடையாளம் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய தேசிய விடுதலைக்குப் பிறகு மொழிப்பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஆட்சிசெய்த திராவிட இயக்கங்கள் பெருமளவிலான ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து விட்டன. இப்பள்ளியை நிர்வகிப்பவர்களும் அவர்களே. சொந்த வீட்டிலேயே தாய்மொழி விலக்கப்பட்டது பேரவலம். இன்றைய ஆங்கிலப்பள்ளிகள் தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, உருது, அரபு மற்றும் சமஸ்கிருதத்தை முதன்மொழிப் பாடமாக வைத்துள்ளன. இந்தியும் ஆங்கிலமும் வேலைவாய்ப்பிற்கு உகந்தமொழி என்ற புதுமாயையும் தமிழ்ச்சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறார் பார்த்திபராஜா. தமிழகத்திற்குத் தேவை தமிழ்க்கல்வியா? தமிழ்வழிக் கல்வியா? என்ற கேள்வியை எழுப்பித் தமிழர்களைச் சிந்திக்க வைக்கிறார்.
திராவிட இயக்கத்தின் உச்சபட்ச மொழியரசியல் செம்மொழித்தமிழ் மாநாட்டில் நிறைவடைந்திருக்கிறது. செந்தமிழில் பேசுகிற ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்துவிட்டு அந்தக் குருதிக் கறை காயும் முன்பே தமிழகத்தில் செம்மொழித் தமிழ்மாநாடு என்ற விழாக்கொண்டாடிய இனவுணர்வை எப்படிப் பாராட்டாமல் இருக்கமுடியும். நூலின் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள ”செம்மொழித் தமிழ்மாநாடு என்னும் தமிழ்வியாபாரம்” என்ற கட்டுரையை இனவுணர்வுள்ள அனைத்துத் தமிழர்களும் வாசிக்க வேண்டும். இக்கட்டுரை மூலமாகச் செம்மொழி மாநாட்டைத் துணிச்சலாக விமர்சனம் செய்த பார்த்திபராஜாவைக் கொண்டாடலாம்.
இவ்வாறாகத் தமிழ் ஆய்வாளன் சொல்லத்துணியாத மொழி அரசியலை மார்க்சியத் திறனாய்வு நோக்கில் இந்நூல் ஆராய்கிறது. மொழியை அரசியல் வரலாறு, சமய நோக்கில் எதிர்கொள்கிறது. திடகாத்திரமான வழியில் விவாதிக்கிறது. மொழியைக் கருவியாகக் கொண்டு யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்ற ரகசியத்தைத் தமிழ் அறிஞர்களிடையே மெல்லக் கசிய விட்டிருக்கிறது இந்நூல். அனைத்துத் தமிழ் ஆய்வாளர்களாலும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டிய நூல். கி.பார்த்திபராஜாவின் படைப்புகளில் ஆகச் சிறந்த நூல் என்று இதனைக் குறிப்பிடலாம்.

‘தமிழ் மொழி அரசியல்”
கி.பார்த்திபராஜா
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு,
சென்னை, ஆகஸ்ட் 2010.
பக்கம் – 226, விலை ரூ.110.