Monday, November 15, 2010

உகர ஊகாரத் திருத்தம்

உகர ஊகாரத் திருத்தம்
புலவர் செ.இராசு,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

தமிழ் எழுத்துச் சீர்மை முயற்சிக்கு இப்போது அறுபது வயதாகிறது. 4.09.1993 ‘குமரன்’ இதழில் முருகப்பா அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மை பற்றி முதலில் எழுதினார். 23,24.12.1933 - ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதய்யர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாட்டில் எழுத்துச்சீர்மை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1934 இல் ‘பகுத்தறிவு’ இதழில் சீர்மை பற்றி அறிக்கை வெளியிட்ட தந்தை பெரியார் அவர்கள் 20.01.1935 முதல் ‘குடியரசு’ இதழில் அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். 1948 - இல் சுதேசமித்திரன் நாளிதழை சி.ஆர்.சீனிவாசன் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையுடன் அச்சிட்டார். விடுதலைக்குப் பின்னர் அறிஞர் பலரும் எழுத்துச் சீர்மை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பற்பல இதழ்களும் சீர்மை பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டன.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி 9.10.1978 முதல் தமிழ் எழுத்துச் சீர்மையைத் தமிழக அரசு அறிவித்தது.
ஐ,ஔ - அய்,அவ்: ண,ற,ன - ணா, றா, னா: ண, ல, ள, ன - ணை, லை, ளை, னை: ண,ற,ன - ணொ,றொ,னொ: ண,ற,ன - ணோ,றோ,னோ ஆகியவை அரசு அறிவித்த சீர்மைகள் (பின் 15.01.1979 இல் ஐ, ஔ திருத்தம் தேவையில்லை என்று அரசு அறிவித்தது.). இத்திருத்த ஆணையால் உயிர்மெய் எழுத்துகளில் உகார,ஊகார உயிர்மெய் நீங்கலாக அனைத்தெழுத்துக்களும் சீர்மையை அடைந்தன.
பதினெட்டு மெய்களுடன் உகரம்,ஊகாரம் சேரும் உயிர்மெய்கள் மட்டும் சீர்மையாக இல்லாமல் ஒழுங்கற்று, பல்வேறு முரண்பாடுகளுடன் வடிவங்களைக் கொண்டுள்ளன.
கு,டு,மு,ரு,ழு,ளு:
ங,சு,பு,யு,வு: - குறில் - 3 பிரிவுகள்
ஞ,ணு,து,நு,லு,று,னு:
கூ:
டூ,மூ,ரூ,ழூ,ளு;
ஙூ,சூ,பூ,யூ,வூ; - நெடில் - 4 பிரிவுகள்
ஞ},ணூ,தூ,நூ,லூ,றூ,னூ
இவை 3,4 பிரிவாக இருந்தாலும் நுட்பமாகப் பார்க்குமிடத்து குறிலும் நெடிலும் தனித்தனியே 12 வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றது. குகரம் நெடிலாக மாறும்போது ஏனைய போல் கு என மாறாமல் கூ என உகரம் சேர்த்து எழுதப்படுகிறது. இருப்பினும் நெடிலாக ஒலிக்கிறது. புழந்தமிழாகிய தமிழிலும், வட்டெழுத்திலும் கிரந்தத்திலும் இவ்வளவு முரணான வேறுபாடுகள் இல்லை. இன்றைய தமிழாக உருவெடுத்தபோதுதான் இவ்வேறுபாடுகளைப் பெற்றன.
ஓருயிர் சேர்த்து உயிர்மெய்கள் இவ்வாறு ஒரே சீராக இல்லாமல் வேறுபட்டிருப்பது மொழியியலுக்கு முரண்பாடாக உள்ளன. சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகள் இவ்வேறுபட்ட வடிவங்களைக் கற்று மனத்தில் இருத்திக்கொள்ள எவ்வளவு சிரமப்படும் என்பதை உளவியல் நோக்கில் எண்ணிப்பார்க்க வேண்டும். முரண்பாடுகள் நிறைந்த இவ்வரிவடிவங்களை அக்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் தொடக்க வகுப்பு ஆசிரியர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதைக் கல்வியியல் நோக்கில் காணவேண்டும். சிறார் தலையில் எவ்வளவு பெரிய பாரத்தை ஏறறுகிறோம் என்பதைப் பாருங்கள். இத்தேவையற்ற சிக்கலிலிருந்து சிறார்கள் மீள வேண்டாமா?
தமிழக அரசு கொண்டுவந்த சீர்மைக்கு ………. இகர,ஈகாரத் திருத்தங்களுடன் ஐ,எ,ஏ,உகர,ஊகாரத் திருத்தங்கள் பற்றியும் பல அறிஞர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். திருத்தம் பெற்று முன்னேறுகின்ற மொழிகளோடு நம் தாய்த்தமிழும் முன்னேற வேண்டாமா? கல்லிலும் செப்பேட்டிலும் ஓலையிலும் எழுதப் பெற்ற முறை தேவைபட்டிருக்கலாம். இன்று மிக வேகமாக முன்னேறிவரும் அறிவியல் முன்னேற்றத்தில் நாமும் இணையவேண்டாமா? தட்டச்சு, மின்தட்டச்சு, அச்சு, தொலையச்சு, குராட்மா அச்சு, கணிப்பொறி,…….. டைப், மோனோ டைப் போன்ற அறிவியல் ஆக்கச் சாதனங்களில் அன்னைத்தமிழ் அரியணை ஏற வேண்டாமா?
காலந்தோறும் தமிழ் எழுத்துக்கள் மாறியே வந்துள்ளன என்பதைக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் காட்டுகின்றன. முன்பு எகர, ஒகர உயிர்க்கும் உயிர்மெய்கட்கும், குற்றியலுகரத்திற்கும் புள்ளியிட்டு எழுதினோம். வருடம், மாதம், தேதிகட்குக் குறியீடுகளையே பயன்படுத்தி வந்தோம். தமிழ் எண்களையே முன்பு பயன்படுத்தினோம். இவைகள் எவ்விதப் போராட்டமும் இல்லாமல் மறைந்தனவே ஏன்? 192 காசுகளை ரூபாய்க்குக் கொண்டிருந்த நாம் 100 புதுக்காசுகளை ஏற்றுக் கொள்ளவில்லையா? வள்ளுவர் எழுதிய எழுத்தில் கம்பர் எழுதவில்லை. தமிழ்ச்சுருக்கெழுத்தில் தமிழ் வரிவடிவம் இல்லை என்பதற்காக அதனை யாரும் நீக்க முனையவில்லையே.
இம்மாறுபட்ட இருவகை உயிர்மெய் வடிவங்களுக்கு மட்டும் தட்டச்சுப் பொறியில் 22 தட்டுக்கள் உள்ளன. அவைகளில் சீர்மை மூலம் 20 தட்டுக்கள் குறைந்து இரண்டே தட்டுக்களில் இவ்வடிவங்களைத் தட்டச்சு செய்யலாம். கு, சு, டு, து, நு, மு, ரு, று, ழு, ளு, லு, னு ஆகியவைகட்குத் தனி வடிவங்கள் உள்ளன. (14). ணு அடிக்க இரண்டு பாகங்களைச் சேர்க்க வேண்டும் (2). ங, பு, யு, வு ஆகியவைகளுக்குக் கீழ்க்கோட்டை அடித்து அதன்மேல் ங, ப, ய, வ - வை அடிக்க வேண்டும். (1) டூ, மூ, ரூ, ழூ ஆகியவற்றிற்குச் சுழியை அடித்துப் பின்னர; டு, மு, ரு, ழு ஆகியவைகளை அடிக்க வேண்டும். (1) கூ, சூ ஆகியவைகட்குத் தனி எழுத்துக்கள் உள்ளன (2). பிற எழுத்துக்களை நெடிலாக்க h என்பதை இறுதியில் சேர்க்க வேண்டும் (1). ங, பு, யு, வு - வை நெடிலாக்க கீழ்வளைவைத் தனியாக அடிக்க வேண்டும் (1). சீர்மை மூலம் இவை அனைத்தையும் இரண்டே எழுத்துக்களில் அடக்கலாம். பிற சீர்மைகளுடன் இந்த 20 வடிவங்கள் குறைந்தால் கையடக்கமான தட்டச்சு வந்துவிடும். வேண்டிய இடங்களுக்கு அவைகளை எளிமையாக எடுத்துச் செல்லலாம்.
மின்னணு தட்டச்சு தமிழில் வந்து மின்சுற்றுக் குறைவதால் இக்கருவிகளை இன்றைய நிலையில் பாதி விலைக்கும் குறைவான விலையில் உருவாக்கலாம். இவ்வாறு பொருளியல் நோக்கிலும் உகர, ஊகார சீர்மை முக்கியமானது என்பதை உணர வேண்டும். இவற்றின் மூலம் தட்டச்சு வேகம் பெரிதும் எளிமையாகும். ……… கருவிகள் மூலம்தான் பொத்துப்போவது நீங்கும். எழுத்துக்கள் அழகுபெறும்.
அச்சகங்களில் சில எழுத்துக்கள் 14 கிலோ வாங்கினால் அதே செய்தியை அச்சடிக்க, தமிழ் எழுத்துக்கள் 28 கிலோ தேவைப்படுகிறது. தவிரவும் பழையமுறை எழுத்துக்களில் மேலும் கீழும் வளைவுகள் செல்லுவதால் இடத்தை அடைக்கிறது. இப்போது 30 வரிகள் அச்சிடும் பக்கத்தில் 36 வரிகள் அச்சிடலாம். அச்சு எழுத்துப்பெட்டிகளில் 34 குறைவதால் கை அதிகம் நீளவேண்டிய தேவையில்லை. அச்சுக்கோர்த்தல் எளிமையாகவும், மிக வேகமாகவும் நடைபெறும். விரைவில் நூல்களை அச்சிடலாம். மிகுந்த சிக்கனம் இதனால் ஏற்பட்டு அச்சுச்செலவும் குறையும்.
இணைப்பில் காட்டியுள்ளவாறு பல அறிஞர்கள் உகர, ஊகாரச் சீர்மைக்கு முப்பதிற்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கூறியுள்ளனர். நார்மன் பிரௌன் போன்ற மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் தமிழ் எழுத்துச் சீர்மையை வரவேற்றுள்ளனர்.
இணைப்பில் முதலாவதாக உள்ள {, _ குறியீடுகள் இன்றைய கிரந்த எழுத்துக்களில் உள்ளன. தட்டச்சுக்களிலும் அவை இடம் பெற்றுள்ளன. ராஜீ, ஜீலை போன்ற சொற்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்த அனைவரும் கையாளுகிற குறியீடுகளாக இருக்கின்றன. எழுத்துத் திருத்தங்களின்போது கூடுமானவரை ஏற்கனவே இருக்கின்ற மக்கள் பழகிய குறியீடுகளைச் சேர்த்து எழுதுவதே இன்றியமையாததாகும். முதல் வகுப்பு மாணவருக்கும் இக்குறியீடுகள் புரியும். கொடுமுடி சண்முகம் அவர்கள் 2000 பொதுமக்களிடம் கருத்தறிந்தபோது 80 விழுக்காட்டினர் இக்குறிகளையே ஆதரித்துள்ளனர். இன்றைய தமிழ் ஆட்சிமொழி விரைவு பெறாததற்குக் கூறப்படும் பல்வேறு காரணங்களில் தமிழ் தட்டச்சுப் பொறிகள் போதுமானதாக இல்லாததும் ஒன்று.
புதிய குறியீடுகளைக் கொண்டுவந்து தட்டச்சுக்களை எல்லாம் மாற்றுவது என்பது இயலாத காரியம். இவற்றை ஏற்றால் பழைய தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தலாம். இக்குறியீடுகள் பெற்ற கிரந்த எழுத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கக் கூடியவை. எந்த வடஇந்திய மொழிகளிலும் பிற திராவிடமொழிகளிலும் அவை இல்லை.
பல லட்சம் புத்தங்கள் வீணாகும் என்று எவரும் பயப்படத் தேவையில்லை. பழையமுறை - புதியமுறை மாற்றத்தை மட்டும் அச்சிட்டு அந்நூல்களில் ஒட்டிவிடலாம். படிப்போர் எளிமையாகப் புரிந்து கொண்டு படிப்பர். புழைய புத்தகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. அவைகளை மறு அச்சு செய்யும்போது புதிய சீர்மை முறையில் அச்சிடலாம்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை அமைப்பாளராகவும், அமரர் வ.சு.ப.மாணிக்கம் அவர்களைத் தலைவராகவும் கொண்ட தமிழகப் புலவர்குழு தமிழ் எழுத்துச்சீர்மை அவசியம் தேவை எனத் தீர்மானம் நிறைவேற்றி 2.2.1975 - இல் பரிந்துரை செய்யக் குழு ஒன்றையும் அமைத்தது. அக்குழு உகர, ஊகாரத் திருத்தம் அவசியம் தேவை எனக் கூறியுள்ளது. தலைவரவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
சிலர் உயிர் எழுத்துக்களில் உகர, ஊகாரத்திற்கும் தீவிர மாற்றத்தையும் விரும்புகின்றனர். எழுத்துக்கள் வேண்டாம் குறியீடுகளே போதும் என்பாரும் அகரம் ஒன்றையே பன்னிரு உயிராகவும் குறியீடுகளைச் சேர்த்து எழுதலாம் என்பாரும் உளர். மிகத் தீவிரமான மாற்றம் புதுமொழிபோல் ஆகிக் கற்றவரையும் கல்லாதவராக மாற்றிவிடும். மேற்கண்ட தேவையான திருத்தங்களே உடனடியாகப் போதுமானது. திருத்தத்தை எதிர்ப்போர் தமிழின் எந்த ஒலியும் குறைவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வரிவடிவங்களே செம்மையாக்கப்படுகின்றன என்பதையும் உணர வேண்டும். மொழிப்பற்று என்ற பெயரில் மொழி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது.
உலகில் எல்லா மொழிகளும் எழுத்துச் சீர்மையைக் கொண்டு வந்து விட்டன. அண்மையில் உள்ள மலையாளமொழி 500 - க்கும் மேற்பட்ட உருவங்களை 90 ஆகக் குறைத்துவிட்டது. 40000 - க்கும் மேற்பட்ட எழுத்துக்களுடைய சீனமொழி 200 எழுத்துக்களைப்பெற்று ஏறுநடை போடுகிறது. மேலிருந்து கீழ் எழுதப்பெற்ற ஜப்பான் மொழி இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது.
வேகமாக முன்னேறிவரும் மொழிகளோடு நம் தொன்மைத்தமிழும் ஈடு கொடுத்து முன்னேற தேவை எழுத்துச் சீர்மை! எஞ்சிய உகர, ஊகாரச் சீர்மை அவசியம் உடனடியாக வேண்டும். ‘வளர்ச்சி என்பது மாற்றம்; மாற்றம் இன்மையேல் வளர்ச்சி இல்லை’ இது சமுதாயத்திற்கு மட்டுமல்ல; மொழிக்கும்தான்!

Sunday, November 14, 2010

நாயனார் கோயில்

நாயனார் கோயில்
(ஜீவபந்து ஸ்ரீபால்)
சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோயிலைப் பலரும் நன்கு அறிவர். அக்கோயில் திருவள்ளுவர் கோயில் என இன்று அழைக்கப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நயினார் கோயில் என்றே வழங்கி வந்தது.
வரலாற்றின் வழியில் ஆராயும் போது அக்கோயில் தோன்றிய காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை நாயனார்கோவில் என வழங்கி வந்துள்ளது. நாயனார் எனில் நாயகன், தலைவன் எனப் பொருள்படும். நாயனார் என்ற இச்சொல் முதன் முதல் ஜைன சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர்களுக்கும் ஜைன முனிவர்களுக்கும் பட்டப்பெயராகத் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தின் ஆரம்பத்தில்,
“திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக் கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதை தாழபிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி”
என்னும் அருகன் வாழ்த்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அறிவன் கோயில் என்பதற்கு நாயனார் கோவில் என உரை எழுதியுள்ளார். இது போன்றே கழுகுமலையிலுள்ள கல்வெட்டுச் செய்திகளில் ஜைன முனிவர்களைப் பற்றிய குறிப்புகளில் நாயனார் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. திருவதிகையில் கிடைத்த கல்வெட்டுக்களில் ஜைனக்கோயிலை நால்முக நாயனார் கோயில் என்றும், முனைதீச்சுரம் உடைய நாயனார் என்றும் காணப்படுகிறது. திருப்பரிதிக் குன்றத்துக் கோயில் கல்வெட்டுச் செய்தியில் அக்கோயில் தீர்த்தங்கரரை நாயனார் என்றே பொறிக்கப் பெற்றுள்ளது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் தமது உரையில் அவிநாயனார் என்னும் ஜைன அறவோரை அறிமுகப்படுத்தி உள்ளதைப் புலவர் உலகம் நன்கு அறியும். சில பண்டையக் கல்வெட்டுச் செய்திகளில் தீர்த்தங்கரர்களையும், முனிவர்களையும் நயினார் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம் தாலுக்காவிலுள்ள கோலியனூர் ஜைனக் கோயில் ஒன்றில் ஸ்வஸ்தி ஸ்ரீநயினார் தேவர் பெருமானார் ஸ்ரீகோவில் என்றும், கோலியாபுரநல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் என்றும் காணப்படுகின்றன. இவ்வரலாற்றின் அடிப்படையிலேயே திருக்குறளாசிரியருக்கும் நாயனார் என்றும், தேவர் என்றும் பட்டங்கள் அமைந்துள்ளன. தேவர் என்ற பட்டத்தைப் பற்றிய வரலாறு பலருக்கும் நன்கு தெரியும். ஜைன சமயத்தைத் தோற்றுவித்த முதல் தீர்த்தங்கரருக்கு விருஷப தேவர் (இடப தேவர்) எனப் பட்டம் வழங்கி வந்துள்ளது போன்று ஜைன முனிவர் பலருக்கும் தேவர் பட்டம் வழங்கி வந்துள்ளன என்பதை அறிகின்றோம்.
இவ்வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள திருக்குறளாசிரியரின் திருக்குறள் வரலாற்றை ஆராய்வோம்.
“மறமேமுனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியும் அருட்கொண்டலே யதரஞ்சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநாளொழித்துப்
புறமே திரிந்த பிழையடியேனைப் பொறுத்தருளே”.
எனத் திருநூற்றந்தாதி ஆசிரியர் மயிலாபுரியில் கோயில் கொண்டிருந்த நேமிநாத தீர்த்தங்கரரைப் போற்றியுள்ளார். இது போன்று வேறு பல தோத்திரப் பாக்களாலும், மயிலாப்பூரில் கிடைத்துள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகளாலும், கல்வெட்டுச் செய்திகளாலும் பண்டைய காலத்தில் ஜைன சமயத்தின் உறைவிடமாய் மயிலாப்பூர் விளங்கிற்றென்பது தெளிவாகிறது. இத்தகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மயிலாப்பூரில் நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர், அவிரோதிநாதர், நேமிநாதம் இயற்றிய குணவீர பண்டிதர் போன்ற பல்கலைச் செல்வர்களாகிய ஜைன அறவோர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். மயிலாப்பூரில் வாழ்ந்த ஜைனப் பெருமக்கள் நேமிநாதரை வழிபட்டதைப் போன்றே தெய்வப் புலவராம் திருக்குறளாசிரியரின் திருவடிச் சின்னங்களைப் பொறித்து வைத்து வழிபாடியற்றி வந்தனர்.
நமது பாரத நாட்டின் வரலாற்றை ஆராயின் ஜைன சமயத்தவரே முதன் முதல் தீர்த்தங்கரர்களையும், ஆச்சாரியர்களையும், முனிவர்களையும் வழிபட அம்மகான்களின் திருவடிச் சின்னங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளது நன்கு விளங்கும். குறிப்பாக இமயமலையில் கைலாசகிரியிலும் வங்காளத்தைச் சார்ந்த சம்மேதசிகர மலையிலும், சம்பாபுரி, பாவாபுரி, கிர்னார் போன்ற பல மலைகளிலும் தீர்த்தங்கரர்களின் திருவடிகள் பொறிக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் பொன்னூர் மலையில் திருக்குறளாசிரியர் குந்தகுந்தாச்சாரியார் திருவடிகளையும், இப்பெருமான் பிறந்த திருத்தலமாகிய குந்தகுந்தா மலையிலுள்ள (குண்டக்கல் பக்கத்தில் உள்ள குந்தகுந்தாபுரத்தில் குந்தகுந்தர் பற்றியக் கல்வெட்டுச் செய்திகளை இன்றும் காணலாம்) திருவடிகளையும், திருப்பறம்பூர் அகளங்கதேவர் திருவடிகளையும், ஜின காஞ்சியில் வாமனமுனிவர் திருவடிகளையும், விழுக்கம் குணசாகரர் திருவடிகளையும் காணலாம்.
கி.மு. 3–ம் நூற்றாண்டில் தென்னகம் விஜயம் செய்த பத்திரபாகு சுவாமிகளின் திருவடிகளும், மௌரிய சக்கரவர்த்தி சந்திரகுப்த மன்னரின் திருவடிகளும் சிரவண பெல்குலாவில் அழகாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்வழக்காற்றின் துறையிலேயே மயிலையிலும் திருக்குறள் ஆசிரியரின் சிறப்புப் பெயர்களாகிய திருவுள்ள நாயனார் அல்லது திருவுள்ள தேவர் எனப் போற்றி அவர் திருவடிகளை ஜைன பெருமக்கள் வணங்கி வந்தனர். இவ்வழிபாட்டில் ஏனைய சமயத்தவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் இக்கோயிலைக் குறிப்பிடும் பொதெல்லாம் தமிழகத்து ஜைனப் பெருமக்களின் பட்டப்பெயராகிய நயினார் என்பதைக் கொண்டு நயினார் கோயில் என அன்புடன் அழைத்துப் போற்றுவார்கள். அவ்வழக்கம் இன்றும் அப்பகுதியில் வழங்குவதைக் காணலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “திருவள்ளுவர் கோயில் எது?” என்று கேட்டால் அக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் ஒன்றும் விளங்காமல் விழிப்பார்கள். நயினார் கோயில் எனில் “அதோ” எனச் சுட்டிக் காட்டுவார்கள்.
கி.பி. 17-ம்நூற்றாண்டுவரை மயிலாப்பூரில் பெரும்பாலும் ஜைன சமயத்தவரே வாழ்ந்து வந்தமையால் அவர்களின் பட்டப் பெயராகிய நயினார் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைத்து வந்தனர். மயிலையில் ஜைனர்கள் மலிந்திருந்தனர் என்பதைப் பண்டைய நூலாகிய தோத்திரத் திரட்டில் “மயிலாப்பூர் பத்து” என்னும் பதிகத்தில்,
“ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனையுயரமோ ரோசனையில்
களிதரு நாண்மலரணியும் சோகுடையரி குலநாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடருநால் வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனையேமலி திருமயிலாபுரியே”
எனவரும் தோத்திரப் பாவின் கடைசி வரியால் விளங்குகிறது. இதனால் மயிலாப்பூரில் சாவகர்கள்(நயினார்கள்) சிறப்பாகவும் செழிப்பாகவும் வாழ்ந்திருந்தனர் என்பதையும் அறிகின்றோம். “அந்“நயினார்” பட்டம் தமிழகத்தில் வாழும் ஜைனர்களிடம் இன்றும் சிறப்பாக வழங்கி வருகிறது. ஜைன சமயத்தினின்றும் வேறு சமயம் புகுந்தவர்களும் தங்கள் பண்டைய நயினார் பட்டத்தைத் துறக்கவில்லை என்ற உண்மையை இன்றும் காணலாம். குறிப்பாக நீறுபூசி வேளாளர்களும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, செஞ்சி, ஆரணி பகுதிகளில் காப்பலூர், கலசப்பாக்கம் கிராமங்களில் வசிக்கும் பல வேளாளர்களும் பண்டைய நயினார் பட்டத்தையே வைத்துக் கொண்டுள்ளார்கள். தென்னாட்டு முஸ்லீம்களில் பெரும்பாலோருக்கும் நயினார் பட்டம் வழங்குகிறது. அவர்களும் ஜைனர்களாயிருந்து மாறியவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் ஆழ்வார் திருநகர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள சைவ சமயத்து வேளாளர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் நயினார் பிள்ளை எனத் தங்கள் பண்டைய சமயப் பெயரை விடாது அமைத்துக் கொண்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தின் பல பாகங்களில் நயினார் குளம், நயினார் மண்டபம், நயினார் மேடு, நயினார் குப்பம் என வழங்குவதைக் காணலாம். அவைகள் யாவும் ஜைனர்கள் வாழ்ந்த இடங்களே ஆகும்.
இத்தகு சான்றுகளால் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த நயினார்கள் வழிபாடியற்றிய திருக்குறளாசிரியர் நாயனார் கோயிலே இன்று திருவள்ளுவர் கோயில் என அழைக்கப்படுகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அத்திருவடிகள் எங்கே?
பண்டைய கால முதல் திருக்குறளாசிரியரின் திருவடிகளை வணங்கி வந்த நயினார்கள்(ஜைனர்கள்) மயிலாப்பூரில் பிற்காலத்தில் அருகிவிட்டார்கள். அங்குள்ள கோயில்களும் சின்னங்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் போயின. இது மறுக்கவியலாத வரலாற்று உண்மை! இந்நிலையில் சுமார் 100 அல்லது 120 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறளாசிரியருக்கு உருவச்சிலை வைப்பதாகக் கூறித் தாடி மீசை சடையுடன் கூடிய உருவச்சிலையைச் செய்து வந்து திருக்குறளாசிரியர் திருவடிச் சின்னங்களுக்குப் பின்னே மூலவராக அமைத்தார்கள். அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அத்திருவடிச்சின்னத்தைப் பெயர்த்தெடுத்து மறைத்து விட்டார்கள்.
இவ்வடாத செயலைக் கண்ட அங்குள்ள பொதுமக்கள் அர்ச்சகரையும், அவ்வாறு செய்ததற்குக் காரணமாய் இருந்தவர்களையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். இவ்வெதிர்ப்பின் வேகத்தை அறிந்த அர்ச்சகர்கள் அச்சின்னத்தைச் சிதைத்து சில மாறுதல்களுடன் உள்கோவிலை விட்டு வெளியே மண்டபத்தில் வைத்தார்கள். இவ்வாறு சில காலம் அம்மண்டபத்திலேயே இருந்தது என்றாலும் அவ்வர்ச்சகர்கள் அத்திருவடிகள் அங்கிருப்பதில் வெறுப்பே கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் அங்கு வருபவர்கள் அத்திருவடிகளையும் தொழுது வந்தார்கள். அதனால் சில ஆண்டுகள் கழித்து அச்சின்னத்தை அக்கோயிலின் மதிற்சுவரில் வைத்து மூடி விட்டார்கள். அதனையறிந்த பொதுமக்கள் எதிர்க்கவே புதைத்த இடத்திலேயே திறந்து வைத்து விட்டார்கள். இக்கிளர்ச்சிகளெல்லாம் ஜைனர் அல்லாத அப்பகுதிப் பொதுமக்களாலேயே நடந்தது. ஏனெனில் அவர்கள் பல காலமாக அத்தேவர் திருவடிகளைத் தொழுது வந்த உரிமையாலும் அன்பாலும் ஆகும். ஜைன சமயத்தவர் வழிபடும் சின்னம் என்பதற்காகவும் திருக்குறளாசிரியரின் சிறப்புப் பெயராகிய திருவுள்ளநாயனார் என்னும் பெயர் மாறித் திருவள்ளுவர் என வழங்குவதை நிலை நிறுத்தவுமே இச்சதிச் செயல் நடந்ததெனில் மிகையாகாது.
இவ்வரலாற்றைச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அந்நயினார் கோயிலின் எதிர் வீடுகளில் வசித்து வந்த வயது முதிர்ந்தோரின் வாயிலாகக் கேட்டறிந்தேன். இச்செய்தியைத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களிடத்தும் பேராசிரியர் எ.சக்கரவர்த்தி நயினார் அவர்களிடத்தும் நான் தெரிவித்தேன். அப்பெரியார்கள் இருவரும் வியப்புற்று அங்குச் சென்று கோயிலின் எதிர்வீட்டு வாயிற்படியில் நின்றிருந்த முதியோரை விசாரித்து உண்மையை அறிந்தார்கள். பின்னர் 1945-ஆம் ஆண்டில் திருக்குறளாசிரியரின் திருவடிகளைப் படமாக வரைந்து “ப்ளாக்” செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் நாள் மயிலாப்பூர் குயப்பேட்டை வீரப்பெருமாள் தெருவில் மயிலைத் திருவள்ளுவர் கழகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்களின் வற்புறுத்துதலின் பேரில் யான் தலைமை வகித்தேன். எனது தலைமையுரையில் அக்கோயிலின் வரலாற்றைப் பேசுமாறு தமிழ்ப் பெரியார் பணித்தார்கள். அவ்வாறே மேலே குறிப்பிட்ட வரலாற்றை விளக்கிப் பேசினேன். இதனைக் கேட்ட அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் வியப்புற்றனர். அது மட்டுமல்ல! பண்டைக்கால மதக்காழ்ப்பின் போக்கினை எண்ணி எண்ணித் திகைத்து விட்டார்கள். கூட்டம் முடிவடைந்ததும் அவ்விழாவில் சொற்பொழிவாற்றிய அறிஞர் பெருமக்களான தமிழ்ப் பெரியார் திரு.வி.க அவர்கள், பன்மொழிப்புலவர் டி.பி.மீனாட்சி சுந்தரனார் அவர்கள், தமிழறிஞர் ரெவரெண்ட் அருள் தங்கையா அவர்கள், எஸ்.லஷ்மிதரன் பாரதியார் பி.ஏ.,பி.எல். அவர்கள், திரு.கே.அன்பழகன் எம்.ஏ. அவர்கள் ஆகிய அறிஞர்களும், புலவர்களும் திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்கள். யான் பொதுக்கூட்டத்தில் விளக்கியவாறே மதிற்சுவரில் வைத்துள்ள திருவடிச் சின்னத்தைக் கண்டு முற்றும் உண்மை உண்மை என உள்ளம் பூரிக்கப் பேசிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவ்வீதி மக்களில் ஒரு வயது முதிர்ந்த அம்மையாரை நோக்கி இது என்ன கோயில் எனக் கேட்டார்கள். உடனே அக்கிழவி, நயினார் கோயில் எனப் பகர்ந்தார். எதிர்பாராத இவ்விடையைக் கேட்டதும் புலவர்களும், பொது மக்களும் கைகொட்டி மகிழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை நோக்கித் தாங்கள் கூறியவாறு நயினார் கோயில் என்பது மறுக்கவியலாத வரலாற்று உண்மை எனப் பாராட்டினர். திருக்குறளாசிரியர் தேவர் திருவடிச் சின்னத்தை அகற்றித் திருவள்ளுவர் உருவச் சிலையெனக் கற்பனையாகச் சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தும் தொன்றுதொட்டுவரும் நயினார் கோயில் என்ற பெயரும் தேவர் திருவடிச்சின்னமும் அம்மக்கள் உள்ளத்தினின்றும் அகலாது நின்று நிலவுகிறது என்றும் வியந்து பேசினார்கள். இத்தகு அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் உண்மை கண்ட நாம் பண்டைய வரலாற்றுச் சின்னத்தை நிலைநாட்ட முற்பட வேண்டும். இதனால் நமது ஆசிரியர்களாகிய அறவோர்கள்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பையும், பக்தியையும் உலகோர் கண்டு வியப்பர். உயர்ந்தோர் திருவடிகளை வணங்கும் நமது பண்பும் எந்நாளும் அழியாது வழி வழி வளரும்.
ஆகவே, நமது பாரத அரசியலரால் வெளியிடப்பட்டதும், நமது சென்னை அரசியலாரைக் கலந்து வரையாததுமாகிய திருக்குறளாசிரியரின் திருவுருவப் படத்தைப் பெரும்பாலான தமிழறிஞர்கள் ஏற்காததும் பலரும் அறிந்ததே. “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்” எனத் திருக்குறளாசிரியர் எவைகளை வேண்டா என வெறுத்தாரோ அவைகளையே அவர் தலையில் வைத்துச் சுமத்தியது போன்ற உணர்ச்சியே நமது உள்ளத்தில் உருவாகிறது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பலரும் சமய, சாதி அரசியல் கட்சி நோக்கங்களை மறந்து, “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்னும் அருட்கொடியைத் தாங்கி நிற்கும் நமது தேவர் பெருமானைப் பண்டைய காலச் சான்றோர்கள் வழி நின்று அவ் அறவோரின் திருவடிகளையே சிலையாகச் செய்து வாழ்த்தி வணங்குவோமாக.