Wednesday, July 27, 2011

தமிழ் மொழி அரசியல் - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்
கி.பார்த்திபராஜா – வின்
“தமிழ் மொழி அரசியல்”
- பி.பாலசுப்பிரமணியன்
அரசியல், வரலாறு, மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், நாடகம் எனப் பல துறைப்பட்ட கருத்தியல் வடிவங்களை மார்க்சியப் பார்வையுடன் வளமான சிந்தனைகளோடு ஆராய்ந்து வருபவர் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா. இவர் தமிழ் நாடக ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும் மொழி அரசியல் குறித்த அவரது புலமை தமிழ் மொழி அரசியல் நூலாகப் பிரசவித்திருக்கிறது.
மொழி குறித்த அரசியல், சமய, வரலாற்றுப்பார்வை காலங்காலமாகக் கவனப்படுத்தப்படாமல் அம்மொழி இலக்கியங்களை இரசனைப்பூர்வமாகப் பார்க்கிற ஆதிக்க மனோபாவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களைக் குறிப்பாகத் தமிழிலக்கியம் படித்துவிட்டு இனவுணர்வில்லாமல் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அறிஞர்களைத் தட்டி எழுப்புகிறது இந்நூல். மேலும் இந்நூல் குறித்த தி.சு.நடராசனின் முன்னுரை பேசப்பட வேண்டியவை.
தமிழ் x சமஸ்கிருதம், தமிழ் x இந்தி, தமிழ் x ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஊடாட்டத்தால் தமிழ்ச்சமூகம் அடைந்த மாற்றம் அளப்பரியது. அரசியல் கட்சிகளும் சமய இயக்கங்களும் தத்தம் நிலையான இருப்பிடத்திற்காக மொழியை அரசியலாக்கிய நிகழ்வு வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியர் அவற்றைத் தோண்டி எடுக்கிறார். எந்தச் சலனமுமின்றி கொடிய செயல் அறவே என அக்கருத்தியல் நிகழ்வுகளை விமர்சிக்கிறார்.
திராவிட இயக்க ஆளுமைகள் என்று தமிழ்ச்சமூகத்தால் அடையாளப்படுத்தப்படுகிற தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் மொழிக்கொள்கை, தமிழ்மொழி குறித்த அவர்களது பார்வை, சமஸ்கிருதம் மற்றும் இந்தியை எதிர்க்கிறோம் என்ற பேரில் அவ்விடத்தில் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்திய இவர்களது விசாலமான அறிவும் விமர்சிக்கப்படுகிறது. பார்ப்பனிய மனோபாவம் மிகுந்த ராஜாஜியின் சுயசாதியம் சார்ந்த இந்தி ஆதிக்கக் கருத்தியல் உடைபடுகிற தன்மையை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். காலனிய ஆட்சியருடன் விடுதலைக்குப் பின்பு காங்கிரஸ் இயக்கத்தினரிடம் இருந்த மொழிச்சிந்தனை ஆரோக்கியமானதல்ல என்பதையும் பார்த்திபராஜா பதிவு செய்கிறார். இவ்வாறு, இந்நூலில் இடம்பெற்றுள்ள பெரியார் மற்றும் அண்ணாவின் மொழிக்கொள்கைகள் குறித்த இரண்டு விமர்சனக் கட்டுரைகள் கவனத்திற்குரியவை.
தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆங்கிலம் பகுத்தறிவு மொழி என்ற பெரியாரின் பண்பு அடிப்படையிலான மொழி வகிபாடு சரியான கருத்தல்ல என்பதும் ஸ்டாலினின் மொழி வரையறை, ஆணியமொழி மற்றும் சாதிய மொழியின் அடையாளம், தமிழ் உணர்ச்சியின் எரிச்சலாகப் புதுமைப்பித்தன், ஞானக்கூத்தன், ஜெயகாந்தன் போன்றோரின் தமிழ்மொழி குறித்த பார்வையினையும் மொழி என்பது பரிமாற்றக் கருவி அல்ல சமூகப்பண்பாட்டின் அடையாளம் என்பதையும் ஊடகங்கள் எவ்வாறு தமிழைக் கொலை செய்கின்றன என்பதும் தமிழ்நாட்டில் தமிழ்ப் பேசுவதற்குத் தங்கக்காசு கொடுக்கும் செயல்பாடு, திரைப்படங்களில் தமிழாசிரியர்கள் கேலிக்குள்ளாக்கப்படும் முறைமை, ஆங்கிலப்பள்ளிகளில் தமிழ்ப் பேசினால் தண்டம் இறுக்கும் தமிழ்த்தேச அவமானம் குறித்த விமர்சனங்களை “மொழி வரலாற்று வகிபாகம் – சமூகம்” என்ற கட்டுரையில் விவாதிக்கிறார்.
சமஸ்கிருதத்தில் புலமை கொண்ட தமிழறிஞர்கள் தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என வாதிடத் தொடங்கினர். தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தூக்கி நிறுத்தியவராக ஒரு சாரரால் புகழப்படுகிற ம.பொ.சிவஞானம் மொழித்தோற்றத்தை இறைப்பின்னணியுடன் சேர்த்துப் புரிந்து கொண்டவர் என்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது. இலக்கண இரட்டையர்களான பிரயோக விவேகம் எழுதிய சுப்பிரமணிய தீட்சிதரும் இலக்கணக்கொத்து ஆசிரியருமான சுவாமிநாதத் தேசிகரும் தமிழின் தனித்தன்மையை அழிப்பதற்கான இயக்கத்தைத் தொடங்கினர் என்ற வ.சுப.மாணிக்கனாரின் கருத்து விவாதத்திற்குரியது. ற,ன,ழ,எ,ஒ என்ற எழுத்துக்கள் மட்டுமே தமிழுக்குரியன என்றும் தமிழ் ஐந்தெழுத்துக்கொண்ட ஒரு பாஷை என்று குறிப்பிடும் சுவாமிநாதரின் கருத்து நூலில் விமர்சிக்கப்படுகிறது. தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்பதை நிறுவுவதற்குப் பல மொழி அரசியல் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மா.பொ.சியும் பாரதியும் சமஸ்கிருதத்தை உயர்வாகப் பேசியிருக்கின்றனர். பிற்காலத்தில் பாரதிக்குப் பிடித்த மொழியாகத் தமிழ் இருந்த நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.
தமிழிலக்கியச் சூழலில் எழுந்த பக்தி இயக்கங்கள் தமிழையும் வடமொழியையும் ஒன்றாகக் கண்டன. இவ்வியக்கங்கள் இறைவன் இவ்விரு மொழிகளுக்கும் உரியவன் என்பதை அடையாளப்படுத்தின. தமிழ் x வடமொழி எதிர்வுணர்வு என்பது வேளாள நிலவுடைமையாளர்கள் மற்றும் பார்ப்பன நிலவுடைமையாளர்கள் இடையிலான முரண்பாடுகள் என்கிறார் கி.பார்த்திபராஜா.
பக்தி இயக்க உருவாக்கத்திற்கு முன்பு தமிழ் இலக்கிய, இலக்கண ஆக்கங்களைச் செய்தவை சமண, பௌத்தச் சமயங்களே ஆகும். இச்சமயங்களை மக்களிடமிருந்து ஒழித்துக்கட்ட பக்தி இயக்கம் முச்சங்கப் புனைவு குறித்த கருத்தியலை வடிவமைத்தது. பிற்கால வரலாற்றில் சமயமும் தமிழை அரசியலாக்கியது. மொழித்தோற்றம் குறித்த கருத்து சமயத்தோடு பிணைக்கப்பட்ட வரலாற்றினை இந்நூலின் முதற்பகுதி ஆராய்கிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள “ஸ்போக்கன் சம்ஸ்கிரிட் செத்தவன் ஓட்டுப்போட வரும் வித்தை” என்ற கட்டுரை சமஸ்கிருதம் பேச்சு மற்றும் எழுத்து வழக்கற்ற மொழி என்பதையும் இம்மொழியைச் செம்மொழியாக்கி அழகுபார்த்த இந்திய அரசின் மேட்டிமைத்தனத்தையும் போலி அரசியலையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கிறது. சமஸ்கிருதத்தைவிடத் தமிழ் செம்மொழியாவதற்கான தகுதியினைப் பட்டியலிட்டு அதற்கான அங்கீகாரத்தை அடையாளப்படுத்துகிறது. அதனையடுத்து, மூன்று மொழிப்போராட்டங்களைப் பற்றி இந்நூல் பேசுகிறது. 1938 -40 களில் நடைபெற்ற முதல் மொழிப்போர் இந்தியாவின் பொதுமொழி, ஆட்சிமொழி, நிர்வாகமொழி, தொடர்புமொழி ஆகிய அனைத்திற்கும் இந்தியைக் கட்டமைக்க முயற்சித்த காங்கிரஸின் தலைமையை எதிர்த்து நடைபெற்றது. தமிழகத்தில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முந்திக்கொண்டு நின்றவர் இராஜாஜி. அதன்காரணமாக முற்போக்கு ஆளுமைகள் இவரை எதிர்க்கலாயினர். இம்மொழிப் போராட்டத்தில் படிக்காத பாமர மக்களும் உழைக்கும் ஏழைகளும் கலந்து கொண்டு போராடினர். இந்தி எதிர்ப்பு போரில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட முதல் மொழிப்போர் ஈகி தலித் சமூகத்தைச் சார்ந்த நடராசன் என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறார் இந்நூலாசிரியர். முதல் மொழிப்போர் பற்றிய விமர்சனக் கட்டுரையின் மற்றொரு அம்சம் இந்தியை எதிர்த்து நடைபெற்ற ஒட்டுமொத்த மாநாடுகளைப் பற்றிய விவரங்கள் தொகுத்துத் தரப்பட்டு அவை விமர்சிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் மொழிப்போர் மாணவர்களால் முன்னிறுத்தி எடுத்துச் செல்லப்பட்டது. கீழ்ப்பழுவூர் சின்னச்சாமியின் தீக்குளிப்பு கவனிக்கத் தக்கது. மரணத்திற்கு முன்பு சின்னச்சாமி எழுதிவிட்டுச் சென்ற கடிதத்தை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் பார்த்திபராஜா.
தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தித் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தால் நடத்தப்பெற்ற மூன்றாம் மொழிப்போர் பற்றியும் இந்நூல் பேசுகிறது. மொழிப் போராட்டங்களைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றின் அரசியல் பின்னணியைப் புரிந்து கொள்வதற்கும் இந்நூல் ஏதுவாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட இனத்தைத் தொப்புள்கொடி உறவில்லாமல் வேரோடு அழிக்க வேண்டுமானால் அவர்கள் பேசும் மொழியை அழித்தால் போதுமானது. ஆகவே, தமிழ்மொழியை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்களைப் பற்றி என்றைக்குத் தமிழர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்கள். தமிழ்ச்சமூகத்தில் ஆங்கிலம் படித்தால் போதும் இதுவே மேதைமைக்கான அடையாளம் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய தேசிய விடுதலைக்குப் பிறகு மொழிப்பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஆட்சிசெய்த திராவிட இயக்கங்கள் பெருமளவிலான ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்து விட்டன. இப்பள்ளியை நிர்வகிப்பவர்களும் அவர்களே. சொந்த வீட்டிலேயே தாய்மொழி விலக்கப்பட்டது பேரவலம். இன்றைய ஆங்கிலப்பள்ளிகள் தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, உருது, அரபு மற்றும் சமஸ்கிருதத்தை முதன்மொழிப் பாடமாக வைத்துள்ளன. இந்தியும் ஆங்கிலமும் வேலைவாய்ப்பிற்கு உகந்தமொழி என்ற புதுமாயையும் தமிழ்ச்சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறார் பார்த்திபராஜா. தமிழகத்திற்குத் தேவை தமிழ்க்கல்வியா? தமிழ்வழிக் கல்வியா? என்ற கேள்வியை எழுப்பித் தமிழர்களைச் சிந்திக்க வைக்கிறார்.
திராவிட இயக்கத்தின் உச்சபட்ச மொழியரசியல் செம்மொழித்தமிழ் மாநாட்டில் நிறைவடைந்திருக்கிறது. செந்தமிழில் பேசுகிற ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்துவிட்டு அந்தக் குருதிக் கறை காயும் முன்பே தமிழகத்தில் செம்மொழித் தமிழ்மாநாடு என்ற விழாக்கொண்டாடிய இனவுணர்வை எப்படிப் பாராட்டாமல் இருக்கமுடியும். நூலின் இறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள ”செம்மொழித் தமிழ்மாநாடு என்னும் தமிழ்வியாபாரம்” என்ற கட்டுரையை இனவுணர்வுள்ள அனைத்துத் தமிழர்களும் வாசிக்க வேண்டும். இக்கட்டுரை மூலமாகச் செம்மொழி மாநாட்டைத் துணிச்சலாக விமர்சனம் செய்த பார்த்திபராஜாவைக் கொண்டாடலாம்.
இவ்வாறாகத் தமிழ் ஆய்வாளன் சொல்லத்துணியாத மொழி அரசியலை மார்க்சியத் திறனாய்வு நோக்கில் இந்நூல் ஆராய்கிறது. மொழியை அரசியல் வரலாறு, சமய நோக்கில் எதிர்கொள்கிறது. திடகாத்திரமான வழியில் விவாதிக்கிறது. மொழியைக் கருவியாகக் கொண்டு யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்ற ரகசியத்தைத் தமிழ் அறிஞர்களிடையே மெல்லக் கசிய விட்டிருக்கிறது இந்நூல். அனைத்துத் தமிழ் ஆய்வாளர்களாலும் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டிய நூல். கி.பார்த்திபராஜாவின் படைப்புகளில் ஆகச் சிறந்த நூல் என்று இதனைக் குறிப்பிடலாம்.

‘தமிழ் மொழி அரசியல்”
கி.பார்த்திபராஜா
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு,
சென்னை, ஆகஸ்ட் 2010.
பக்கம் – 226, விலை ரூ.110.