Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Sunday, December 12, 2010

திருப்பணிமாலை நூல் வெளியீட்டு விழா

அமெரிக்க நாசா விண்வெளிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிற பொள்ளாச்சி நா.கணேசன் அவர்கள் எனது நெறியாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் திருப்பணிமாலை என்ற நூலை பற்றி அறிமுகம் செய்து, அந்நூலை ஆய்வு நிகழ்த்தக் கூறினார். மேலும், இவ்வாய்வு நூலாக வெளிவர வேண்டும் எனக் கருதி அதற்காக ஐயாயிரம் பணத்தையும் கொடுத்தனுப்பினார். எனது நெறியாளர் அந்நூலைப் பற்றி வியந்து கூறி என்னையே இந்நூல் பற்றி ஆய்வு செய்யுமாறு கூறினார். நான் திருப்பணிமாலை நூலைப் படித்துப் பார்த்தேன் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிறகு இந்நூலின் வேறு பிரதி எங்காவது கிடைக்குமா என்று மதுரை நகரம் முழுக்கத் தேடி அலைந்தேன். மதுரையில் இருக்கிற மிக அற்புதமான நூலகம் நான்காம் சங்கம் என அழைக்கப்படுகிற செந்தமிழ்க் கல்லூரி நூலகத்தில் திருப்பணிமாலை நூல் கிடைத்தது. இந்நூலகத்தைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகக் கூறியாக வேண்டும். மிகப்பழமையான நூலகம் குறைந்தது ஐம்பதாயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மரபு இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை ஏராளமான நூல்கள் பரந்து கிடக்கின்றன. நூலகர் முருகேசன் புன்சிரிப்போடு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துத் தருவார். இவரைப் போன்ற நூலகர்களைப் பார்ப்பது மிக அரிது. நூலின் பெயர், ஆசிரியர் பெயர் மற்றும் நூல் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது உடனே முருகேசன் நம்மை இருக்கையில் அமர வைத்துவிட்டு நூலைக் கொண்டு வந்து தருவார். வாருங்கள் என் ஆய்வுக்குச் செல்லுவோம். இவ்வாறு திருப்பணிமாலை மூல நூல் பிரதி மிகப் பழமையாக இருந்தது. நூலின் தாளைத் தொட்டால் கிழிந்துவிடும் அளவிற்கு இருந்தது. அப்பிரதியை நகல் எடுத்து ஆய்வுக்குப் பயன்படுத்தினேன். இந்நூலின் மற்றொரு பிரதியை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் காணமுடிந்தது. ஒரு வழியாக நூலை வாசித்து எனது கள ஆய்வினைத் தொடங்கினேன். ஆய்வு வெற்றிகரமாக முடிந்து எனக்கு இளநிலை ஆய்வுப் பட்டத்தினைப் பெற்றுத் தந்தது.
முனைவர் தொ.பரமசிவன் மற்றும் எனது நெறியாளரின் தூண்டுதலால் இவ்வாய்வேடு புத்தகமாக வெளிவந்தது. இவ்வாய்வேடு நூலாக வெளிவர வா.நேரு அவர்கள், எனது நண்பர்கள், மாணவர்கள் மற்றும் முனைவர் கி.பார்த்திபராஜா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். மேலும் எனது கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ.மரியசூசை அடிகளார் உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழாவில் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் புரிசை ச.நடராசன், ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.திருமால் முருகன், வா.நேரு, சங்கையா அண்ணன்,எமது கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஆர்ப்பரித்து மகிழும்படி அவர்களது ஆசியுடன் நூல் வெளியீட்டு விழா நடந்ததில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

Sunday, August 8, 2010

தமிழ் இணையம் கருத்தரங்கம்

தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ் முதுகலைத் துறையில் ஒவ்வொரு மாதமும் களம் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மாதம் 11.08.2010 ஆம் நாளன்று (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை களம் கூட்டம் நடைபெற இருக்கிறது. “தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும்” என்ற தலைப்பில் செம்மொழி இளம் அறிஞர் முனைவர்.மு.இளங்கோவன் சிறப்புரையாற்ற இருக்கிறார். நான் அப்பெருமகனாரை அறிமுகம் செய்ய இருக்கிறேன். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் ஓலைச்சுவடிகளில் மட்டுமல்லாது கணிப்பொறியிலும் ஏறியிருக்கிறது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று இந்த பேதை உரைத்தான் என்று பாரதி கோபக்கனலை எழுப்புவான். ஆனால் பாரதிதான் தமிழ் சாகும் என்று கூறினான் என இன்னும் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் அறிவு ஜீவிகள். ஆனால் இன்று தமிழின் வளர்ச்சியை கணிப்பொறியின் வழியாகவும் இணையத்தின் வழியாகவும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது போன்ற இணையக் கருத்தரங்கை முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அன்னாரின் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது.

Monday, July 12, 2010

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி

புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்துப் பள்ளி
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இசைநாடகக்கலை சிறப்பான கலையாக அந்தப்பகுதிகளில் வாழுகின்ற மக்களால் கருதப்பட்டு வருவதைப்போல வடஆர்க்காடு மாவட்டங்களில் தெருக்கூத்து மிக உன்னதமான பாரம்பரியக் கலையாக அப்பகுதிமக்களால் போற்றப்பட்டு வருகிறது.
தெருக்கூத்து திரௌபதியம்மன் கோயிலுடன் தொடர்புடைய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக, புரிசை கிராமம் தெருக்கூத்துக் கலையையும், கலைஞர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு தெருக்கூத்துக் கலைஞனாக வாழ்வது என்பது சாதாரண காரியமல்ல. வெகுசன ஊடகத்தின் அதீத வளர்ச்சியால் இது போன்ற எண்ணற்ற மரபுக்கலைகள் அழிந்துவிடக்கூடும் என்கிறார்ள் அறிவுஜீவிகள். ஆனால் தெருக்கூத்து சடங்குகளோடு கூடிய கலை என்றாலும், தற்கால வாழ்க்கை நெருக்கடிகளுக்கேற்ப தன்னுடைய உள்ளடக்கக் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறது நமது தமிழ் இலக்கியத்தைப் போல. இளைய தலைமுறைகள் தங்களது ரசனையை மாற்றிக்கொண்டால் நிச்சயமாகத் தமிழகத்தின் பாரம்பரிய மரபுக் கலைகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்.
அத்தகைய பெருமை பொருந்திய தெருக்கூத்துக் கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றேன். நமது பாரம்பரியக் கலைகளை நாம் கற்றுக்கொள்ளாமல் வேறு யார் கற்றுக்கொள்ள முன் வருவார்கள். நான் இக்கலையைக் கற்றுக்கொள்வதற்குக் காரணம் என்னுடைய மாணவர்கள் ஆர்வத்தோடு தெருக்கூத்துக் கலையைப் பயில ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும்.
புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் மகன் கண்ணப்ப சம்பந்தன் எங்களுக்குப் பயிற்சியளித்து “அனுமன் தூது” என்ற தெருக்கூத்தை அரங்கேற்றம் செய்தார். ஏப்ரல் 17-ந் தேதி சனிக்கிழமை இரவு 9-மணியளவில் “அனுமன் தூது” என்ற தெருக்கூத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. இக்கூத்தில் நான் ‘அங்கதன்’ வேடமிட்டு நடித்தேன்.
இப்புகழ் பெற்ற புரிசை மண்ணில் தெருக்கூத்துப் பயின்று நடித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்க கலை! வாழட்டும் கலைஞன்!